தவெக கூட்டத்தில் உயிரிழந்த இளைஞர் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
TVK Salem Meeting Tragedy: சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்ட வட மாநில தொழிலாளி சூரஜ் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த நிலையில் தவெக சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர்.
சேலம், பிப்ரவரி 14 : சேலத்தில் கடந்த பிப்ரவரி 13, 2026 அன்று நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த நிலையில் அவருக்கு தவெக சார்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் சீலநாயக்கன்பட்டி பிப்ரவரி 13, 2026 அன்று தவெக சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார். நிர்வாகிகள் கூட்டம் என்பதால் பாஸ் வைத்திருக்கும் 5000 பேருக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டத்தில் பாஸ் பெற்று மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சூரஜ் என்பவர் பங்கேற்றிருந்தார்.
தவெக கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர் மரணம்
37 வயதாகும் சூரஜ் இவர் சேலத்தில் வெள்ளிப்பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடுமையான வெயிலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக சூரஜ் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தவெக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தவெக நிர்வாகிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட பாஸ் சூரஜிற்கு எப்படி கிடைத்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிக்க : திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸ் உரிமை.. பரபரப்பை கிளப்பிய மாணிக்கம் தாகூர்!




உடலை வாங்க மறுத்த உறவினர்கள்
இந்த நிலையில் அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு பிப்ரவரி 14, 2026 அன்று காலை 11 மணியளவில் பிரேத பரிசோதனை தொடங்கி ஒருமணி நேரம் வரையில் நடைபெற்றது. இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் திரண்டிருந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், தவெக சார்பில் இதுவரை யாரும் வந்து சுராஜின் குடும்பத்தை சந்திக்க வில்லை. கட்சியின் சார்பில் யாரும் இதுவரை ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. அவரையே நம்பியிருந்த சூரஜின் குடும்பத்தினருக்கு கட்சியின் சார்பில் உதவி செய்யவேண்டும். அதுவரை உடலைப் பெற மாட்டோம் என்று கூறி உயிரிழந்த சூரஜின் குடும்பத்தினர் அவரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க : விஜய்-த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் கருத்து…தவெகவினர் கடும் கண்டனம்!
இது தொடர்பாக பேசிய அவரது நண்பர்கள் சுராஜிற்கு கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாகவும், ஆனால் அவரது உடல்நிலை நன்றாகவே இருந்தது என்றும் தெரிவித்தனர். அவரது மரணம், இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.