பறவைக் காய்ச்சல் பாதிப்பு.. வதந்திகளை நம்ப வேண்டாம்.. விழிப்புணர்வு கொடுத்த தமிழக அரசு!!
Bird flu outbreak: பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், ஆனால் அதே சமயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எங்கேனும் காகம் மற்றும் பறவை இறந்த விவரம் அறியப்பட்டால் உடனடியாகக் கால்நடைத் துறைக்கும், உள்ளாட்சி துறை அமைப்புகளுக்கும் தெரிவிக்க வேண்டும்.
சென்னை, பிப்ரவரி 14: பறவைக் காய்ச்சல் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழக அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் சில மாவட்டங்களிலும், குறிப்பாக சென்னையின் ஒரு சில பகுதிகளில் காகங்கள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு நடத்தினார்கள். அதில், ஒரு காகத்தில் பறவைக் காய்ச்சல் (H5N1) பாதிப்பு கண்டறியப்பட்டது. இது மிகவும் வேகமாகப் பரவக்கூடிய வைரஸ் என்பதால், கோழிகள் மற்றும் வீட்டுப் பறவைகளுக்குத் தொற்று ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: காதலர் தினம்.. எல்லை மீறினால் கடும் நடவடிக்கை.. காதலர்களுக்கு போலீசார் எச்சரிக்கை!!
தலைமைச் செயலக ஆய்வுக்கூட்டம்:
இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பறவைகள் மூலம் சில அரிதான சந்தர்ப்பங்களில் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால், சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பைத் தொடங்கியுள்ளது. குறிப்பாகப் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். அப்போது, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில் பறவைக் காய்ச்சல் பரவும் முறை பற்றியும், தமிழ்நாட்டில் யாருக்கும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் விளக்கப்பட்டது.
தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்:
பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க பொது சுகாதாரத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட அளவில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு கடந்த 6-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், பல்வேறு துறைகளுடன் இணைந்து மாவட்ட அளவில் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்பட்டது. மேலும், மனிதர்களுக்குப் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பப்பட்டது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் படிக்க: பாஜகவின் புதுமையான பிரசாரம்.. வாசகமே கிடையாது.. வியந்த மக்கள்!!
பொதுமக்களுக்கு அரசின் அறிவுரை:
இதில், பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், ஆனால் அதே சமயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவுரைகள்,
- பறவைக் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. எங்கேனும் காகம் மற்றும் பறவை இறந்த விவரம் அறியப்பட்டால் உடனடியாகக் கால்நடைத் துறைக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தெரிவிக்க வேண்டும்.
- யாருக்கேனும் காய்ச்சல், சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகிச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
- கோழி இறைச்சி மற்றும் முட்டை போன்ற அசைவ உணவுகளை நன்றாகச் சமைத்த பின்னரே சாப்பிட வேண்டும்.
- பறவைக் காய்ச்சல் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம். பறவை காய்ச்சல் பற்றிய சந்தேகங்களுக்கு 104 என்ற தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
- பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருந்தால் இந்தத் தொற்று பரவலை எளிதாகக் கட்டுப்படுத்தலாம் என்பதால், அரசுடன் இணைந்து ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.