போடி தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ்?.. மகன் ரவீந்தரநாத் அறிவாலயத்தில் விருப்ப மனு!
Panneer Selvam and O P Ravindhranath Optional Petition Filed | தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தந்தை ஓபிஎஸ் மற்றும் தனக்கும் சேர்த்து ஓ.பி.ரவிந்தரநாத் சென்னை அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை இன்று தாக்கல் செய்துள்ளார்.
சென்னை, மார்ச் 06 : தமிழக சட்டமன்ற தேர்தல் (Tamil Nadu Assembly Election) நடைபெற உள்ள நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் (DMK – Dravida Munnetra Kazhagam) சார்பில் போட்டியிட தந்தை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தனக்கான விருப்ப மனுக்களை ஓ.பி ரவீந்திரநாத் வழங்கியுள்ளார். இந்த நிலையில், ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் எந்த எந்த தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சூடு பிடிக்கும் தமிழ்நாடு தேர்தல் களம்
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தேர்தலுக்கு முன்னதாக கட்சிகள் கூட்டணியை உறுதி செய்வதற்கான பணிகளை மேற்கொண்ட நிலையில், எதிர்பாராத விதமாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். அதுமட்டுமன்றி, முதல் முறையாக தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
இதையும் படிங்க : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.வி மாற்றம்.. குடியரசு தலைவர் அதிரடி உத்தரவு!
காங்கிரஸ், தேமுதிக, விசிக, ஓபிஎஸ் அணி என மிகுந்த பலத்துடன் திமுக இந்த தேர்தலை எதிர்க்கொள்ள உள்ளது. அதன்படி, இந்த தேர்தலில் ஓபிஎஸ் மற்றும அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் திமுக சார்பில் போட்டியிட உள்ளது உறுதியாகியுள்ள நிலையில், அவர்களுக்கான விருப்ப மனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஓபிஎஸ், ஓபிஆர் விருப்ப மனுக்கள் தாக்கல்
திமுக சார்பில் போடி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் விருப்ப மனு வழங்கியுள்ளார். அதேபோல தனக்காக போடி மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதிகளுக்கு அவர் விருப்ப மனுக்களை வழங்கியுள்ளார். இந்த நிலையில், கம்பம், போடி, ஆண்டிப்பட்டி ஆகிய மூன்று தொகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட அவர் விருப்ப மனுக்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.