நெல்லை- தென்காசியில் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்.. மதுக்கடைகள் மூடல்.. பெரும் போராட்டம்!
TASMAC Employees Suspension : திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கியதாக 20 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனராம். இதை கண்டித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை கண்டித்து ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் .
தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவது தொடர்பான பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் இருந்து வந்த இந்த பிரச்சனை தற்போது, தவெக ஆட்சியிலும் நீடிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் சில டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சுமார் 277 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 20 டாஸ்மாக ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்த இரு மாவட்டங்களில் இன்று அனைத்து மது கடைகளும் திடீரென மூடப்பட்டிருந்தன. இதனால், வழக்கம்போல மது வாங்குவதற்காக வந்திருந்த மது பிரியர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
நெல்லை டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் தர்ணா
இந்த நிலையில், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் சுமார் 100- க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது. டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தின் உள்ளே தரையில் அமர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் படிக்க: காங்கிரஸ் இல்லையெனில் தவெக கதை முடிந்திருக்கும்.. மாணிக்கம் தாகூர் ஆவேசம்!




டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதன் காரணமாக அசம்பாவிதம் ஏதும் நிகழாத வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். பின்னர், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் ஏற்பட்ட நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். டாஸ்மாக் ஊழியர்களின் இந்த திடீர் முற்றுகை போராட்டத்தால் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
தமிழகத்தில் 277 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்?
கடந்த திமுக ஆட்சியில் மது கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கப்படுவதாக புகார் இருந்து வந்தது. இது தொடர்பாக அப்போதைய மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விளக்கம் அளித்து இருந்தார். இதே போல, தற்போதைய தவெக ஆட்சியிலும் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பது தொடர்பான புகார் இருந்து வருகிறது. இதற்கு, துறை அமைச்சர் விக்னேஷ் பதில் அளித்து இருந்தார். இந்த நிலையில் தான், சுமார் 277 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: சட்டப்பேரவையை சண்டை களமாக மாற்ற முயற்சி.. எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு!