“தலித் மாணவர்கள் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது!”.. அமைச்சர் வன்னியரசு பகீர் குற்றச்சாட்டு!!
Minister Vanni Arasu Pressmeet: தலித் மாணவர்கள் விவகாரத்தில் திமுக தான் அரசியல் செய்கிறது என்று விசிக அமைச்சர் வன்னியரசு குற்றஞ்சாட்டியுள்ளார். மாணவர் பாரதிதாசன் கல்வி உதவித்தொகை விவகாரம், வேங்கைவயல் சம்பவம் மற்றும் கவின் படுகொலை உள்ளிட்ட விவகாரங்களில் திமுகவின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசிய அவர், தலித் இளைஞர்களின் எதிர்காலத்தில் அக்கறை காட்டுவது போல் திமுக நாடகமாடுகிறது எனக் கடுமையான சாடியுள்ளார்.
சென்னை, செப்.19: தமிழக அரசியல் களத்தில் தலித் மற்றும் பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் அவர்களின் உரிமைகள் சார்ந்த விவகாரங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, மாணவர் பாரதிதாசன் கல்வி உதவித்தொகை தொடர்பான பிரச்சனையில் திமுகவுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே கடுமையான கருத்தியல் மற்றும் அரசியல் மோதல்கள் வெடித்துள்ளன. தலித் மாணவர்களின் நலனில் உண்மையில் அக்கறை கொண்ட அரசு எது என்றும், யார் உண்மையான ஆதரவாளர்கள் என்றும் இரு தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வன்னியரசு, தலித் மாணவர்கள் பிரச்சனை மற்றும் வேங்கைவயல் உள்ளிட்ட முந்தைய சம்பவங்களைச் சுட்டிக்காட்டி திமுக மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதையும் படிக்க: சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்க 4 கடற்கரைகளுக்கு அனுமதி.. காவல்துறை பிறப்பித்த முக்கியக் கட்டுப்பாடுகள்!
தலித் மாணவர்கள் நலனில் திமுகவிற்கு அக்கறை இல்லை:
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வன்னியரசு, தலித் மாணவர்கள் விவகாரத்தில் தங்களுடைய இயக்கம் எந்தவித அரசியலையும் செய்யவில்லை என்றும், மாறாக திமுக தான் இதில் தேவையின்றி அரசியல் செய்து வருகிறது என்றும் தெளிவுபடுத்தினார். தலித் மாணவர்கள் மீது திமுகவிற்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், தாங்கள் எழுப்பிய நியாயமான கேள்விகளுக்குப் பதில் அளித்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். மொத்தம் 609 மாணவர்கள் விண்ணப்பித்து, அதில் 601 பேர் தகுதிபெற்ற போதிலும், வெறும் 153 பேருக்கு மட்டுமே வாய்ப்பளித்துவிட்டு மீதமுள்ள தலித் மாணவர்களுக்கு திமுக அரசு துரோகம் இழைத்துள்ளதாகச் சாடினார்.
வேங்கைவயல் மற்றும் கவின் படுகொலை விவகாரங்கள்:
கடந்த காலங்களில் நடந்த பல்வேறு சம்பவங்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், வேங்கைவயல் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது திமுக தான் என்று குற்றம்சாட்டினார். அப்பகுதியைச் சேர்ந்த முரளிராஜா என்ற தலித் இளைஞர் (காவலர்) இடைநீக்கம் செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நியாயம் வழங்காமல் வஞ்சித்துள்ளதாகத் தெரிவித்தார். அதேபோல, திருநெல்வேலியில் நடைபெற்ற கவின் படுகொலை சம்பவத்திலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக நின்று போராட்டம் நடத்தியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் என்றும், அதன் பின்னரே சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.
இதையும் படிக்க: சென்னை விமான நிலையத்திற்கு வரப்போகும் மாற்றம்?.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதத்தால் பரபரப்பு!!
காவல்துறை மிரட்டல் விகாரத்திற்கு விளக்கம்:
மாணவர் பாரதிதாசனின் வீட்டிற்கு உளவுத்துறை மற்றும் காவல்துறை சென்று மிரட்டியதாக பரப்பப்படும் தகவல்களை மறுத்த வன்னியரசு, அவை அனைத்தும் திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகள் என்று கூறினார். அந்த மாணவர் தனது தம்பி போன்றவர் என்றும், அவரது கல்விக்கும் பாதுகாப்புக்கும் எந்தக் குறைபாடும் வராது என்றும் உறுதி அளித்தார். சட்டவிரோதமாக யாராவது நடவடிக்கை எடுத்தால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட அவர், கடந்த கால நடைமுறைகளின்படியே துறை ரீதியான செயல்பாடுகள் தொடர்வதாகவும், மாணவர் பாரதிதாசன் முறையான ஆவணங்களை அனுப்பாவிட்டாலும் கூட அவரது எதிர்கால நலனைக் கருதி கேட்கப்பட்ட முழுத் தொகையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.