சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. போயஸ் கார்டனில் மாதம் ரூ.2 லட்சம் வாடகைக்கு பங்களா? வீரமணி வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்
Chennai Crime: விசாரணையின்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணி, தனது பார்ட்னர்களுக்கு மதுபானங்களுடன் சிறுமிகளை சீரழித்ததும், இதற்காக போயஸ் கார்டனில் மாதம் இரண்டு லட்சம் ரூபாய் வாடகையில் பங்களா வீட்டை எடுத்து உல்லாசமாக இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
செப்டம்பர் 19, 2026: தமிழ்நாட்டின் முன்னணி தொழிலதிபரும், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான 84 வயது ஆர். வீரமணி, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மகேந்திர சிம்மன் மற்றும் அவரது மனைவி சாந்தியும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை:
வழக்கறிஞரான வீரமணி, 1970-80களில் இந்திய கிரானைட் தொழிலை உலக அளவில் கொண்டு சென்ற முன்னோடிகளில் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார். போலீஸ் விசாரணையின்படி, சென்னை தேனாம்பேட்டையில் அவர் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் சிறுமிகளை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை சாந்தி ரகசியமாக வீடியோ பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2025 அக்டோபர் 6ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவரிடம் அடையாளம் தெரியாத நபர் பென்டிரைவ் மற்றும் சிசிடிவி ஆதாரங்களை வழங்கியதாக கூறப்படுகிறது. அதில் 2019ஆம் ஆண்டு சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட காட்சிகள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மறுவிசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்:
ஆனால், புகார் அளிக்கப்பட்ட பின்னரும் நீண்ட காலம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், வீடியோ ஜோடிக்கப்பட்டது என்றும் கூறி போலீசார் இருமுறை இறுதி அறிக்கை தாக்கல் செய்த நிலையில், போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதனை நிராகரித்தது. மேலும், வீடியோ ஆதாரம் இருந்தும் குற்றம் நடந்த இடத்தையும் குற்றவாளியையும் கண்டறியாதது குறித்து கேள்வி எழுப்பிய நீதிமன்றம், மறுவிசாரணை நடத்த உத்தரவிட்டது.
கல்வி உதவி வழங்குவதாக சிறுமிகளை அழைத்து வந்த கொடூரம்:
இதையடுத்து தனிப்படை போலீசார் தேனாம்பேட்டை வீட்டில் சோதனை நடத்தி டிஜிட்டல் ஆதாரங்களை மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில், 13 வயது சிறுமி ஒருவர் அடையாளம் காணப்பட்டு, அவரது வாக்குமூலம் நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது. ஏழை மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்குவதாகக் கூறி இடைத்தரர்கள் மூலம் சிறுமிகளை சென்னைக்கு அழைத்து வந்ததாகவும் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தேனாம்பேட்டை வீடு மட்டுமின்றி வீரமணியின் சொந்த வீடு, அலுவலகம் மற்றும் சென்னை புறநகரில் உள்ள கெஸ்ட் ஹவுஸிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிக்கிய ஆதாரங்கள்:
இதனிடையே, வழக்கில் இருந்து தப்பிக்க மூத்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு ரூ.5 கோடி வரை லஞ்சம் வழங்க முயன்றதாக எழுந்துள்ள புகார் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சாந்தியின் பழைய செல்போனில் 2003ஆம் ஆண்டு சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பான குறுஞ்செய்தி கிடைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது நீதிமன்ற அனுமதியுடன் 3 நாட்கள் போலீஸ் காவலில் உள்ள வீரமணியிடம் விசாரணை நடத்துவதற்காக 100 கேள்விகள் அடங்கிய பட்டியலை போலீசார் தயாரித்துள்ளனர். அவரது வயதைக் கருத்தில் கொண்டு புழல் சிறை வளாகத்திலேயே விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கின் அனைத்து டிஜிட்டல் ஆதாரங்களையும் திரட்டி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளியான திடுகிடும் உண்மைகள்:
விசாரணையின்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணி, தனது பார்ட்னர்களுக்கு மதுபானங்களுடன் சிறுமிகளை சீரழித்ததும், இதற்காக போயஸ் கார்டனில் மாதம் இரண்டு லட்சம் ரூபாய் வாடகையில் பங்களா வீட்டை எடுத்து உல்லாசமாக இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க: ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்பு.. உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு!
ஆசிரமங்கள் தொடங்கி, ஏழை மாணவிகளுக்கு படிக்க நிதி உதவி செய்து, அவர்களை தனது இச்சைக்குப் பயன்படுத்திய பயங்கரமும் இதன் மூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.