AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்பு.. உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு!

TN Govt Releases Overseas Scholarship: அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தனக்குரிய நிதி விடுவிக்கப்படாததால் படிப்பை நிறுத்தும் சூழல் ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டிய மலேசிய ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசனுக்கு, ரூ.23.95 லட்சம் நிதியைத் தமிழ்நாடு அரசு விடுவித்துள்ளது. அமைச்சரின் உறுதியைத் தொடர்ந்து திங்கள்கிழமைக்குள் நிதி கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்பு.. உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு!
மாணவர் பாரதிதாசன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 19 Sep 2026 13:00 PM IST

தமிழ்நாடு அரசால் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்வதற்காக ‘அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, மலேசியாவில் உள்ள முன்னணிப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன், தனக்குச் சேர வேண்டிய இரண்டாம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை இன்னும் விடுவிக்கப்படவில்லை எனக் கூறித் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்தார். உரிய நிதி கிடைக்காததால் கல்லூரி நிர்வாகம் அழுத்தங்களைத் தருவதாகவும், கல்லூரியிலிருந்தே வெளியேறக்கூடிய சோகமான சூழல் உருவாகியுள்ளதாகவும் வருத்தத்துடன் அவர் சமூக வலைத்தளங்களில் காணொளி வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், மாணவர் பாரதிதாசனுக்குச் சேர வேண்டிய ரூ.23.95 லட்சம் கல்வி உதவித்தொகையைத் தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை உடனடியாக விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்க 4 கடற்கரைகளுக்கு அனுமதி.. காவல்துறை பிறப்பித்த முக்கியக் கட்டுப்பாடுகள்!

ஆவணச் சிக்கலும் அமைச்சரின் உடனடி உறுதியும்:

முன்னதாக, மாணவர் பாரதிதாசனுக்கு நிதி விடுவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதற்கு, அவரிடமிருந்து உரிய ஆவணங்கள் முறையாகச் சமர்ப்பிக்கப்படாததே காரணம் என்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மாணவனின் நிலையை உணர்ந்து சிறப்பு நடவடிக்கையாகப் பிரச்னைக்குத் தீர்வு காண சமூக நீதித்துறை முன்வந்தது. இது குறித்துப் பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, “மாணவர் பாரதிதாசனுக்கான கல்வி உதவித்தொகை ஓரிரு நாட்களில் முழுமையாக விடுவிக்கப்படும்” என்று உறுதியளித்திருந்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, துறை சார்ந்த அதிகாரிகள் இதற்கான ஆவணப் பரிசீலனைகளை விரைந்து முடித்து, அரசாணையைப் பிறப்பித்துள்ளனர்.

கல்வி உதவித்தொகை விவரங்கள் மற்றும் வங்கி வரவு:

சமூக நீதித்துறை மூலம் விடுவிக்கப்பட்ட மொத்த நிதியான ரூ.23 லட்சத்து 95 ஆயிரம், இரு வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுப் பணப் பரிவர்த்தனை செய்யப்படவுள்ளது. அதன்படி, நடப்புக் கல்வியாண்டிற்கான முதன்மை ஆராய்ச்சி நிதி மற்றும் கல்விச் சேவைக் கட்டணம் நேரடியாகப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கணக்கிற்கும், மாணவரின் தங்கும் விடுதிக் கட்டணம் மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்கான தொகை மாணவர் பாரதிதாசனின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கும் அனுப்பப்படுகிறது. இதற்கான நிதிப் பரிமாற்றப் பணிகள் அனைத்தும் வெள்ளி இரவு முடிவடைந்த நிலையில், சனி மற்றும் ஞாயிறு வங்கி விடுமுறை நாட்களாக இருப்பதால், எதிர்வரும் திங்கள்கிழமைக்குள் நிதி முழுமையாக வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சென்னை விமான நிலையத்திற்கு வரப்போகும் மாற்றம்?.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதத்தால் பரபரப்பு!!

வெளிநாட்டு உயர்கல்வித் திட்டங்களும் மாணவர் நலனும்:

தமிழ்நாட்டைச் சேர்ந்த எளிய பின்னணி கொண்ட மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் பயில வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், ஆண்டுதோறும் பல பட்டியலின மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வருகிறது. இருப்பினும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கடுமையான கட்டணச் கெடு மற்றும் நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு, இத்தகைய உதவித்தொகைகளை எவ்வித நிர்வாகத் தாமதமுமின்றி குறித்த காலத்தில் வழங்க வேண்டியது அவசியமாகும். தற்போதைய நிகழ்வில், ஊடகங்களின் மூலம் செய்தி பரவிய உடனேயே தமிழ்நாடு அரசு மற்றும் சமூக நீதித்துறை காட்டிய அதிரடி சுறுசுறுப்பும் வெளிப்படைத்தன்மையும், வெளிநாடுகளில் பயிலும் பிற தமிழ்நாட்டு மாணவர்களிடையேயும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us