மதுரை அதிமுக பிரமுகர் கொலைக்கு இதுதான் காரணம்…போலீசார் பரபரப்பு விளக்கம்!
Madurai AIADMK Leader Murder: மதுரை மாவட்டத்தில் அ. தி. மு .க பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மாவட்ட போலீசார் பரபரப்பு விளக்கத்தை அளித்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக முதலில் வந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து சேர்வை மகன் தனசேகர பாண்டியன் என்ற செந்தில். அதிமுக பிரமுகரான இவர், வழக்கம் போல நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை அந்தப் பகுதியில் உள்ள தனது சொந்த டீ கடையை திறப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென தனசேகர பாண்டியனை வழி மறித்து தகராறில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கியது. மேலும், அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தனசேகர் பாண்டியனை கடுமையாக வெட்டியது. இதில், தனசேகர பாண்டியன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க உயிரிழந்தார். இந்த இந்த கொலை சம்பவத்துக்கு முன் பகை காரணம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த கொலை சம்பவத்துக்கு வேறு காரணம் இருப்பதாக மதுரை காவல்துறை தெரிவித்துள்ளது.
கொலை குறித்து தவறான செய்திகள்
இது தொடர்பாக மதுரை போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) அதிகாலை 5:30 மணி அளவில் சாமநத்தம்- நெடுங்குளம் பிரதான சாலையில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளி அருகே செயல்பட்டு வரும் காம்ப்ளக்ஸில் உள்ள டீ கடையில் மர்ம கும்பலால் தனசேகர பாண்டியன் என்ற செந்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, தனசேகர பாண்டியன் என்ற செந்தில் தனது டீ கடை முன்பு மது அருந்தி கொண்டிருந்த நபர்களை தட்டி கேட்டதால், அதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
மேலும் படிக்க: அதிகாலையில் கொட்டும் பனி.. எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வானிலை அப்டேட் இதோ!!




அதிமுக பிரமுகர் கொலைக்கு இதுதான் காரணம்
இந்த நிலையில், கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தனசேகர பாண்டியன் என்ற செந்தில் குடும்ப தகராறு காரணமாக மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வருகிறது. எனவே, டீ கடை முன்பு மது அருந்திக் கொண்டிருந்த அவர்களை கண்டித்ததால் தனசேகர பாண்டியன் கொலை செய்யப்பட்டார் என்பது உண்மைக்கு புறம்பானதாகும். குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதால் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறது.
எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம்
எனவே, இந்த கொலை சம்பவம் தொடர்பாக தவறான தகவலை யாரும் பரப்ப வேண்டாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, அதிமுக பிரமுகர் தனசேகர பாண்டியன் என்ற செந்தில் கொலை சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதே போல, அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: குடிநீர் பாட்டில்களில் மைக்ரோபிளாஸ்டிக் உறுதி… எச்சரிக்கை வாசகம் கட்டாயம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு