ஆதரமில்லாத புகாரில் அஜித்குமார் அடித்துக்கொலை… நீதிமன்றம் வேதனை
Ajith Kumar Custodial Death case: திருப்புவனம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல்துறையினரின் ஜாமின் வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், அடிப்படை ஆதாரமற்ற புகாரில் அஜித்குமார் காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. அதுகுறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மதுரை, பிப்ரவரி 4 : அடிப்படை ஆதாரமற்ற ஒரு புகாரின் அடிப்படையில் அஜித்குமார் காவல்துறையினரால் கொல்லப்பட்ட சம்பவம் மனிதநேயத்தை உலுக்கியுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை (High Court) கடும் வேதனையை வெளிப்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் கோவில் பாதுகாவலராக பணியாற்றிய அஜித்குமார் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட காவலர்களின் ஜாமீன் மனு விசாரணை போது இந்த கருத்துகளை நீதிமன்றம் பதிவு செய்தது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் அஜித்குமார் பாதுகாவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2025 ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி, நிகிதா என்ற பெண் தனது காரில் இருந்த நகைகள் திருடப்பட்டதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், கடந்த ஜூலை 28, 2025 அன்று அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற சிறப்பு படை போலீசார், விசாரணை என்ற பெயரில் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, இதனால் பலத்த காயமடைந்த அஜித் குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில் இந்த வழக்கில் கைதான காவல்துறையின் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதையும் படிக்க : மு.க.ஸ்டாலின் 2-ஆவது முறையாக முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது…அமைச்சர் பி.கே.சேகர்பாபு




இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பிப்ரவரி 4, 2026 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். அதற்கு சிபிஐ தரப்பில், நகை திருடப்பட்ட புகாருக்கான எந்த ஆதாரமும் இல்லை. காவல்துறையினரின் விசாரணையில் அஜித்குமாரின் மரணம் நிகழ்ந்தது உறுதிப்படுத்தப்பட்டிருக்கறது என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, ஆதராமே இல்லாத புகாரில் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வளவு கொடூரமான செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் வழக்கு முடியும் வரை சிறையில் இருக்க வேண்டும். காவல்துறையினருக்கு பாடம் கற்பிக்க வேண்டிய அவசியமாகிறது. அர்த்தமற்ற விஷயத்திற்காக ஒருவரை அடித்து கொன்றிருப்பது மனதை நடுங்க வைக்கிறது என்று கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையும் படிக்க : ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்-கடன் ரத்து..அதிமுகவின் 2-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதி..எடப்பாடி போட்ட லிஸ்ட்!
அஜித் குமார் வழக்கில் ஆரம்ப கட்டத்தில் இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு இந்த வழக்கை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து சிபிஐ விசாரணையில் மானாமதுரை காவல் கண்காணிப்பாளர், திருப்புவனம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்டோரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்ப்டடன. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.