5 பேரிடம் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிப்பு – விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு – நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்
Vilathikulam School Girl Murder Case : விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் 5 பேரிடம் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் காவல்துறையினரின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதுரை, மார்ச் 16 : விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் 5 பேரிடம் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் என்ற கிராமத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி திடீரென காணாமல் போனார். இந்த நிலையில் அவரது உடல் வேடநத்தம் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் அரசு தரப்பில் முக்கிய தகவல்
இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் மாரீஸ்வரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மதான விசாரணை மார்ச் 16, 2026 அன்று நீதிபதிகள் சதீஷ் குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இதையும் படிக்க : விளாத்திகுளம் விஷயத்தில் ஏன் இவ்வளவு மெத்தனம்? முதல்வர் ஸ்டாலினை குற்றம்சாட்டிய நடிகை கவுதமி..




மனுவை விசாரித்த நீதிபதிகள், மாணவி காணாமல் போன அன்றைய தினம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது விசாரணை நடத்த வேண்டும். மாணவி காணவில்லை என்பது எவ்வளவு முக்கியமான புகார்? அதில் காவல்துறையினர் அலட்சியத்துடன் செயல்படக்கூடாது எனவும் நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
1600 செல்போன்கள் எண்கள் ஆய்வு
இதனையடுத்து அரசு தரப்பில் இந்த வழக்கில் சந்தேகத்துக்குரிய 5 பேரிடம் இருந்து டிஎஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வக சோதனை முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சம்பவ நேரத்தில் அந்த பகுதியில் பதிவான 1600 செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க : சிபிஐ விசாரணையை சென்னையில் நடத்த வேண்டும் – விஜய் கோரிக்கை – காரணம் என்ன?
மேலும் இந்த வழக்கில் தற்போது வரை 212 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. இதனால் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இறுந்து 24 சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து நீதிபதிகள், மாணவியின் பெற்றோர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்களது வாக்குமூலங்களை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் விசாரணை குறித்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல் 2, 2026 அன்று ஒத்தி வைத்தனர்.