Nainar Nagendran: திமுக கூட்டணிக்குள் புகைச்சல்.. 2026 தேர்தல் குறித்து நயினார் நாகேந்திரன் பேச்சு!
International Yoga Day 2025: சர்வதேச யோகா தினத்தன்று, நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியின் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார். திமுக கூட்டணியில் புகைச்சல் இருப்பதாகவும், மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார். முருக பக்தர்கள் மாநாடு குறித்தும், கீழடி அறிக்கை விவகாரம் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்தார். திருக்குறள் மொழிபெயர்ப்பு உள்ளிட்ட மத்திய அரசின் தமிழ் மொழி சார்ந்த முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார்.

திருநெல்வேலி, ஜூன் 21: 2025 ஜூன் 21ம் தேதியான இன்று சர்வதேச யோகா தினத்தை (International Yoga Day 2025) முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தை அடுத்த அழகர் நகர் பகுதியில் இருக்கும் பூங்கா ஒன்றில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு யோகா மேற்கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், திமுக கூட்டணிக்குள் (DMK Alliance) புகைச்சல் ஏற்பட்டதாகவும், மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களைத்தான் தமிழ்நாடு அரசு ஸ்ட்டிக்கர் ஒட்டி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பேசினார்.
நயினார் நாகேந்திரன் பேட்டி:
யோகா முடிந்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “பாஜக நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இ-பாஸ் நடைமுறையை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசிடம் நீதி கிடைக்கவில்லை. ஆனால், எங்களுக்கு நீதிமன்றம் முலம் நீதி கிடைத்திருக்கிறது. இந்த முருக மாநாடு மிகச் சிறப்பான முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இதில் கட்சி பேதம் இல்லாமல் முருக பக்தர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கின்றோம்.




கீழடி அறிக்கை விவகாரத்தில் மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை. மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களைத்தான் தமிழ்நாடு அரசு ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு செய்து வருகிறார்கள். உலகத்திலேயே சிறந்த மொழி தமிழ் மொழி. கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் மூத்த முடி மொழி தமிழ் மொழி. தமிழை வைத்து இன்னும் சிலர் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். திருக்குறளை 63 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்தது மத்திய அரசுதான். ஐநாவில் பிரதமர் மோடி தமிழை பற்றி பேசியிருக்கிறார். அண்டை மாநிலஙக்ளுக்கு சென்றாலும் பிரதமர் மோடி தமிழை பற்றிதான் பேசுகிறார். ” என்றார்.
திமுக கூட்டணிக்குள் புகைச்சல்:
🔴LIVE: திருமாவுக்கு 2 Seat போதுமா? | Nainar Nagendran Pressmeet | VCK In ADMK Alliance | Nellai https://t.co/U15TJcVVOO
— சாணக்யா (@ChanakyaaTv) June 21, 2025
திமுக கூட்டணி குறித்து பேசிய நயினார் நாகேந்திரன், “திமுக கூட்டணிக்குள் புகைச்சல் இல்லாமல் எப்படி இருக்கும். திமுக கூட்டணிக்குள் இருக்கும் திருமாவளவன் என்ன சொன்னார்..? எனக்கும் தொகுதி ஒதுக்கீடு குறித்து கவலையில்லை, தொடர்ந்து திமுக கூட்டணிக்குள் தொடர்வோம் என்று தெரிவித்தார். அப்போது 5 சீட்டு வாங்கியிருக்கிறார்கள், இப்போது 2 சீட்டு வாங்கி கூட்டணிக்குள் தொடர்வார்களா..? மற்ற கட்சிகளும் பாஜக கூட்டணிக்குள் வருவார்கள். கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடர்கிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ளது என்பதால், எங்கள் கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கும். ” என்று தெரிவித்தார்.