நெல்லை – செங்கோட்டை ரயிலில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி.. குற்றாலநாதர் கோயில் தமிழ் புலவர் கைது!
Tenkasi Crime : திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயிலில் பயணம் செய்த பெண் பயணியிடம் நகை பறிக்க முயன்றதாக குற்றாலநாதர் கோயிலில் தமிழ் புலவராக பணி புரிந்து வரும் கருப்பசாமி என்பவரை தென்காசி ரயில்வே போலீசார் கைது செய்தனர் .
திருநெல்வேலியில் இருந்து தினந்தோறும் செங்கோட்டைக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் தினந்தோறும் ஏராளமான பயணிகள் பயணம் செய்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 12- ஆம் தேதி தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அதே பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் சாந்தியின் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயற்சி செய்தார். உடனே சுதாரித்துக் கொண்ட சாந்தி நகையை பிடித்துக் கொண்டு கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு மற்ற பயணிகள் அந்த நபரை பிடிக்க முயன்றனர். ஆனால், அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சாந்தி தென்காசி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
குற்றாலநாதர் கோயில் தமிழ் புலவர் கைது
அதன் பேரில், ரயில்வே துணை காவல் கண்காணிப்பாளர் லட்சுமணன் மேற்பார்வையில், ரயில்வே இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், சாந்தியிடம் நகையை பறிக்க முயன்றது தென்காசி மாவட்டம், குற்றாலம் கீழ ரத வீதியை சேர்ந்த கருப்பசாமி ( 55 வயது) என்பது, இவர், குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலநாதர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் தமிழ் புலவராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து, நகைத் திருட்டில் ஈடுபட முயன்ற கருப்பசாமியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் படிக்க: “படிக்காவிட்டாலும் அரசு வேலை, 5 இடங்களில் தலைநகரம்”.. சீமானின் புதிய தேர்தல் முழக்கம்..




இந்து சமய அறநிலையத்துறை சார்பில் துறை ரீதியான நடவடிக்கை
பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழ் புலவர் கருப்பசாமி மீது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. ஓடும் ரயிலில் பெண்ணிடம் அரசு ஊழியரை நகை பறிக்க முயன்ற சம்பவமும், அவர் கைதான சம்பவமும் சக பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரயில் பயணிகள் மத்தியில் அச்சம்
திருநெல்வேலி- செங்கோட்டை இடையே காலை முதல் இரவு வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில், ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். மேலும், இந்த ரயிலில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து வருவது வழக்கமாகும். இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு எந்த விதமான தொந்தரவும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது, பெண் பயணியிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: பிரதமரை மிரட்டும் தொனியில் பேசுவதா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கண்டனம்..