ஏப்ரல் 14, 2026: தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு பதிலளிக்கும் வகையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமரையே மிரட்டும் தொனியில் பேசுவது துரதிருஷ்டவசமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொகுதி மறுவரையறை – முதல்வர் வெளியிட்ட வீடியோ:
வரவிருக்கும் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தொகுதி மறுவரையறை குறித்த அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையான கண்டனங்களை தெரிவித்து, தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும், ஒவ்வொரு குடும்பமும் தெருவில் இறங்கும் எனக் கூறியிருந்தார். மேலும், 1950–60களில் இருந்த பழைய திமுக மீண்டும் காண நேரிடும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.
மேலும் படிக்க: “பெண்களுக்கு மாதம் ரூ.2,000”.. ரூ.10 லட்சம் வரை வட்டியில்லாத கடன்.. தமிழக பாஜகவின் அதிரடி தேர்தல் அறிக்கை..
பிரதமரை மிரட்டுவதா? அண்ணாமலை கண்டனம்:
இதுகுறித்து பதிலளித்த அண்ணாமலை, “முதலமைச்சர் வெளியிட்ட காணொளியில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிநடை மிகவும் துரதிருஷ்டவசமானது. பிரதமரை மிரட்டும் விதமாக ‘60களுக்கு திரும்பிவிடும்’ என கூறுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
நமது தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் மரியாதை மற்றும் பிரதிநிதித்துவம் வழங்க பிரதமர் மோடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 2023 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பெண்கள் தொடர்பான சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தற்போது பெண்கள் பாதிக்கப்படாத வகையில் அதை விரைவாக அமல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க: மீண்டும் பழைய திமுகவை பார்க்க வேண்டி இருக்கும்.. மிரட்டல் என்று எடுத்துக்கொண்டாலும் கவலையில்லை – முதல்வர் ஸ்டாலின்
இது மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை இடங்களை அதிகரிக்கும் முயற்சி என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஏப்ரல் 16ஆம் தேதி மசோதாவை பார்க்கும் முன்பே மக்களின் மனதில் அச்சத்தை உருவாக்குவது கண்டிக்கத்தக்கது.
முதலமைச்சராக எடுத்த பதவிப் பிரமாணத்திற்கு எதிரான செயலாக இதை பார்க்க வேண்டிய நிலை உள்ளது” என அவர் தெரிவித்தார்.