அமைச்சர் தரிசனத்தில் ஆகம விதி மீறப்பட்டதா? திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் நீதிமன்றம் விளக்கம் கேட்பு!
Thiruparankundram Temple : திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அமைச்சர் நிர்மல்குமார் தரிசனம் செய்ததில் ஆகம விதிகள் மீறப்பட்டதா என்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை செயலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் சட்டத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி. டி. ஆர். நிர்மல் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தார். அப்போது, அமைச்சர் வருகையில் மாற்றம் இருந்த காரணத்தால் பிற்பகலில் கோவில் நடை அடைப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்த பக்தர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியதாக தெரிகிறது. மேலும், அமைச்சர் நிர்மல் குமார் கோவில் மூலஸ்தானத்தில் தரிசனம் செய்ததாகவும், அது தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த விவகாரத்தில், அமைச்சர் தரிசனம் செய்வதற்காக கோவில் நடை தாமதமாக அடைக்கப்பட்டு ஆகம விதிகளை கோயில் நிர்வாகம் மீறியதாக பக்தர்கள் பெரும் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை செயலருக்கு விளக்க நோட்டீஸ்
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் அமைச்சர் நிர்மல் குமார் தரிசனம் செய்ய சென்றபோது நடந்தது என்ன என்பது தொடர்பாக ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேறொரு வழக்கு விசாரணையின் போது, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு நபர்.. சென்னை விமான நிலையத்தில் கைது.. கையில் இந்த மை-ஆல் சிக்கினார்!




அமைச்சர் நிர்மல்குமார் தரிசனத்தில் என்ன நடந்தது
ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தினந்தோறும் பிற்பகல் 12.45 மணிக்கு நடை சாத்தப்படுவது வழக்கம் ஆகும். ஆனால், கடந்த மே 15- ஆம் தேதி தமிழக மின் துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் இந்த கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். அவரது வருகையில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோவில் நடை பிற்பகல் 1 மணிக்கு பிறகும் திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் தரிசனம் செய்த பிறகே கோவில் நடை சாத்தப்பட்டது.
கோயிலில் ஆகம விதிகள் மீறப்பட்டதா
மேலும், கோவில் மூலஸ்தானத்திற்குள் சென்று அமைச்சர் தரிசனம் செய்தது ஆகியவை கோயில் ஆகம விதிகளுக்கு எதிரானது என்று பக்தர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். இந்த நிலையில், தான் திருப்பரங்குன்றம் கோவிலில் அமைச்சர் தரிசனம் செய்த போது என்ன நிகழ்ந்தது என்பது தொடர்பாக அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும் படிக்க: மின்வாரியத்துக்கு ரூ.2.5 லட்சம் கோடி கடன் – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு தகவல்