கடனைத் திருப்பி கேட்ட பைனான்சியர்.. கொன்று சாக்கு மூட்டையில் வீசிய வடமாநில ஆசாமி.. கோவையில் பயங்கரம்!!
தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது, மே 29ம் தேதி அபுதாகிர் பாஷா தனது வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டிற்குள் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. போலீசார் அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து, நர்பத் சிங்கை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
கோவை, ஜுன் 04: கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்த நபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, உடல் எரிக்கப்பட்ட நிலையில் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மாநகரையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில், கடனைத் திருப்பி கேட்டு மிரட்டியதால் பைனான்சியரைத் தீர்த்துக்கட்டியதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநில ஆசாமி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை ஆர்.எஸ். புரம், பட்டு நூல்காரர் சந்து தெருவைச் சேர்ந்தவர் பஷீர். இவருடைய மகன் அபுதாகிர் பாஷா. இவர் மாற்று ஓட்டுநராக வேலை பார்த்துக்கொண்டே, தனது நண்பர் ஒருவருடன் இணைந்து பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். கடந்த மே 29-ஆம் தேதி மாலை வெளியே சென்ற அபுதாகிர் பாஷா, அதன்பின் வீடு திரும்பவில்லை; அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ். புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.
இதையும் படிக்க: அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பசு.. காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவன் பரிதாப பலி..
கொடூரமாக கொலை செய்தது யார்?:
இந்த நிலையில், சிரியன் சர்ச் சாலையில் உள்ள ஒரு சாக்கடைக் கால்வாயில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் அபுதாகிர் பாஷாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டிருந்ததோடு, வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட கொடூரமான காயங்களும் இருந்தன. பைனான்சியர் அபுதாகிர் பாஷாவை இவ்வளவு கொடூரமாகக் கொலை செய்து எரித்தது யார்? என்பதைக் கண்டுபிடிக்கத் துணை காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது, மே 29-ஆம் தேதி அபுதாகிர் பாஷா தனது வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டிற்குள் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. போலீசார் அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து, அங்கு தங்கியிருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நர்பத் சிங் என்பவரைப் பிடித்துத் தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், அவரே அபுதாகிர் பாஷாவைக் கழுத்தை இறுக்கிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
வடமாநில ஆசாமியின் பகீர் வாக்குமூலம்:
கைது செய்யப்பட்ட நர்பத் சிங் காவல்துறையினரிடம் அளித்த திடுக்கிடும் வாக்குமூலம், “நான் கோவையில் 2017-ஆம் ஆண்டு முதல் தங்கி, செல்போன் மற்றும் அதன் உதிரிபாகங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறேன். கடந்த 2023-ஆம் ஆண்டு அபுதாகிர் பாஷாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இடையில் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அவரிடம் நான் வட்டிக்குப் பணம் வாங்கியிருந்தேன். என்னால் அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அபுதாகிர் பாஷா என்னிடம் அடிக்கடி தகராறு செய்து, பணத்தைத் திருப்பித் தருமாறு மிரட்டி வந்தார். இதனால் அவர் மீது எனக்கு கடுமையான முன்விரோதம் இருந்தது.
ஆதாரங்களை மறைப்பதில் தீவிரம்:
கடந்த 29-ஆம் தேதி இரவு 9 மணி அளவில், அபுதாகிர் எனது வீட்டிற்கே நேரடியாக வந்து பணம் கேட்டுப் பலத்த விவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே, ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கயிற்றை எடுத்து அவரது கழுத்தை இறுக்கிக் கொலை செய்தேன். பின்னர் அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி எடுத்துக் கொண்டு, உடலை ஒரு சாக்குப்பையில் கட்டி வீட்டிற்குள்ளேயே மறைத்து வைத்தேன். ஆதாரங்களை மறைப்பதற்காக அவரது செல்போன்களைப் பொன்ராஜபுரம் பகுதியில் வீசினேன்.
மறுநாள் (மே 30) மாலை, அபுதாகிர் பாஷாவின் உடலை எனது இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்துச் சென்று, சிரியன் சர்ச் அருகே உள்ள சாக்கடைக் கால்வாயில் வீசினேன். உடல் கட்டப்பட்டிருந்த சாக்கு மூட்டையில் எனது கடையின் பெயர் இருந்ததால், மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் அதன் மேல் பெட்ரோலை ஊற்றித் தீவைத்து எரித்தேன். பின்னர் அவரிடமிருந்து எடுத்த மோதிரத்தை அடகு வைத்து 68,000 ரூபாய் பணத்தையும் பெற்றுக் கொண்டேன்.”
இதையும் படிக்க : கோயம்பேட்டில் கார் ஏற்றி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு.. மேலும் ஒருவர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
சிறையில் அடைப்பு:
கொலையாளி நர்பத் சிங்கிடமிருந்து அபுதாகிர் பாஷாவின் தங்கச் சங்கிலியைப் போலீசார் மீட்டனர். இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நர்பத் சிங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார். கடனைத் திருப்பித் தரக் கேட்டு மிரட்டியதற்காக, திட்டமிட்டுப் படுகொலை செய்து உடலை எரிக்க முயன்ற வடமாநில நபரின் இச்செயல் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் – ஞானசேகரன்