‘நீங்கள் தான் போலி விவசாயி…. விளம்பரம் மூலம் ஆட்சி புரியும்…’ – முதல்வர் ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

Edappadi K Palaniswami Replies to CM MK Stalin : தோளில் துண்டு போட்டுக் கொண்டே வேஷம் போடும் போலி விவசாயிகள் அல்ல நாம் என முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்திருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத, விவசாயிகளின் அறியாத ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் தான் போலி விவசாயி.... விளம்பரம் மூலம் ஆட்சி புரியும்... - முதல்வர் ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் - எடப்பாடி கே.பழனிசாமி

Published: 

13 Jun 2025 19:39 PM

ஈரோடு (Erode) மாவட்டம் விஜயமங்கலம் அருகே நடைபெற்ற இரு நாள் வேளாண் கண்காட்சியின் தொடக்க விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் (M.K.Stalin) பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், தோளில் துண்டு போட்டுக் கொண்டே வேஷம் போடும் போலி விவசாயிகள் அல்ல நாம் என்றும் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டால், முதலில் ஓடி சென்று துணை நிற்கும் அரசாக நாங்கள் செயல்படுகிறோம் என்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியை (Edappadi K Palaniswami) மறைமுகமாக விமர்சித்திருந்தார். மேலும் அதிமுக ஆட்சியை ‘வளமான நிலத்தில் முளைத்த களை என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் முதல்வரின் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக தமிழக எதிர்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை – எடப்பாடி கே.பழனிசாமி

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பிறந்தது முதல் இன்றுவரை தான் விவசாயக் குடும்பம் என்றும், தான் ஒரு விவசாயி என்பதை பெருமையாக நினைப்பதாகவும்  இன்றும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் விவசாயிகளின் கஷ்டங்களை முழுமையாக அறிந்தவன் என்றும்  விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத, விவசாயிகளின் அறியாத ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘நான் உண்மையான விவசாயியா ? நீங்கள் உண்மையான விவசாயியா?’ நீங்கள்தான் போலி விவசாயி என்றும்  எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை என்றும் தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை

 

மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் பரவல் போன்றவையும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த அரசின் கவனக்குறைவால் மக்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அவரது அறிக்கை சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு கிட்டத்தட்ட இன்னும் 10 ஆண்டுகள் உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த முறை சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடவிருக்கின்றன. மேலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக, அமமுக, தமாகா, புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தற்போது வரை பாமக மற்றும் தேமுதிக அணிகள் இதுவரை கூட்டணி குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை.