மின்சாரத்துறை பகீர்.. காணாமல்போன ஹார்ட் டிஸ்க்குகள்.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்கள்!
இந்த ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மின்வாரியத்தைச் சேர்ந்த ஒரு பெண் உயர் அதிகாரி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள சிந்தாதிரிப்பேட்டை போலீசார் மின்வாரிய அலுவலகத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, ஜுன் 4: சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் இருந்து, முக்கியத் தரவுகள் அடங்கிய 10-க்கும் மேற்பட்ட கணினி ஹார்ட் டிஸ்க்குகள் மாயம் என்ற அதிர்ச்சிப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாகச் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத் தலைமை அலுவலகத்தின் மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த கணினிகளில் இருந்துதான் இந்த ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயுள்ளன. காணாமல் போன இந்த ஹார்ட் டிஸ்க்குகளில், மின்வாரியத்தின் மிக முக்கியமான டெண்டர்களுக்கான ரகசியக் கோப்புகள் மற்றும் கடந்த காலங்களில் நடைபெற்ற நிலக்கரி கொள்முதல் தொடர்பான மிக முக்கியத் தரவுகள் மற்றும் விபரங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கலாம் என மின்வாரிய உயர் அதிகாரிகள் பலத்த சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: “பழி போடுவதால் மாற்றம் வராது.. தேர்தல் மனநிலையிலிருந்து வெளியே வாங்க”.. தவெக அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
அமைச்சர் ஆய்வுக்குப் பின் அம்பலமான திருட்டு:
அண்மையில்தான் மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், மின்வாரியத் தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். அவர் ஆய்வு நடத்திச் சென்ற சில நாட்களிலேயே இத்தகையதொரு பெரிய திருட்டுப் புகார் வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மின்வாரிய அலுவலகத்தில் உள்ள சில கணினிகளில் கோப்புகள் சரியாகப் பதிவாகாத காரணத்தால், அந்த கணினிகளைப் பராமரிப்புப் பணி செய்ய அதிகாரிகள் முற்பட்டுள்ளனர். அப்போதுதான், அந்த முக்கியக் கணினிகளில் இருந்த 10-க்கும் மேற்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள் கழற்றப்பட்டு, திருடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை:
கடந்த மே மாதம் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் அலுவலகத்தில் வார விடுமுறை மற்றும் குறைவான அளவிலான பணியாளர்கள் மட்டுமே பணியில் இருந்த சூழலைப் பயன்படுத்தி, இந்த ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மின்வாரியத்தைச் சேர்ந்த ஒரு பெண் உயர் அதிகாரி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள சிந்தாதிரிப்பேட்டை போலீசார் மின்வாரிய அலுவலகத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்தில் பாலாஜி காலத்து ஊழல் கோப்புகள்?
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரிடம், “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சந்தேகம் உள்ளதா? யார் யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர், “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இருந்த காலகட்டத்தில்தான் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) கொள்முதல் உள்ளிட்டவற்றில் பல்வேறு ஊழல்கள் நடந்தன. அது தொடர்பான விவகாரங்கள் சிபிஐ வரை சென்றது. எனவே, எந்த மாதிரியான நோக்கத்தில் இந்த ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளன என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவல்துறை விசாரணை முழுமையாக முடிவடைந்த பிறகுதான் முழு விபரங்களையும் கூற முடியும்” என்றார்.
இதையும் படிக்க : இனி ஜெட் வேகத்தில் அரசு திட்டங்கள்.. மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
இந்த விவகாரம் தொடர்பாகச் சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்களைப் பிடித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்வாரியத்தின் முக்கியத் தரவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகள் தலைமை அலுவலகத்திலேயே திருடப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் மற்றும் அரசு நிர்வாக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.