பண மோசடி புகார்.. திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி மகன் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு!
Kalanidhi Veeraswamy Son Case: பண மோசடி தொடர்பாக தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழக எம்.பி.ஆன கலாநிதி வீராசாமி மகன் சித்தார்த் உள்ளிட்டோர் மீது அண்ணா நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அன்பரசு. இவருக்கு, சென்னை அண்ணா சாலையில் 14 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலையில், இவரது நிலத்துக்கான பவர் பத்திரத்தை திமுக எம்பியான கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் கடந்த 2024- ஆம் ஆண்டு மிரட்டி வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து அதற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த நிலத்தின் உரிமையாளரான அன்பரசு கலாநிதி வீராசாமி மகன் சித்தார்த்திடம் தட்டி கேட்டுள்ளார். அதற்கு அவர் நிலத்தின் பத்திரம் மற்றும் வங்கியில் பெற்ற கடன் தொகை ஆகியவற்றை திரும்ப கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2024- ஆம் ஆண்டு அண்ணா நகர் காவல் நிலையத்தில் அன்பரசு புகார் அளித்திருந்தார்.
அண்ணா நகர் காவல் நிலையத்தில் பண மோசடி புகார்
அந்த புகாரில், சென்னை அண்ணா சாலையில் உள்ள எனது நிலத்தின் பவர் பத்திரத்தை திமுக எம்பி கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் வைத்துள்ளதாகவும், அந்த பத்திரத்தை வங்கியில் வைத்து பெற்ற பணத்தை தனக்கு தராமல் மோசடி செய்ததாகவும், பணத்தை கேட்ட போது, அண்ணா நகர் ரவுண்டானா பகுதியில் என்னை ஜாதியை கூறி தாக்கியதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி கூட்டம்… மக்கள் குறைகளை கேட்டறிந்த சார்-ஆட்சியர்!




4 பேர் மீது புகார் தெரிவித்த நிலத்தின் உரிமையாளர்
இது தொடர்பாக, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிநாராயணன், அண்ணா நகர் 102- ஆவது வார்டு திமுக கவுன்சிலர் ராணி ரவிச்சந்திரன், வடசென்னை எம். பி. கலாநிதி வீராசாமியின் உதவியாளர் ஆசை தம்பி, தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், கலாநிதி வீராசாமியின் மகனுமான சித்தார்த் உள்ளிட்டோர் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் தொடர்பாக கடந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் இருந்து வந்தனர்.
பண மோசடி, தீண்டாமை, வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த நிலையில், அன்பரசு அளித்த பண மோசடி புகாரின் அடிப்படையில் திமுக எம் பி கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் மீது அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், சித்தார்த் உள்பட 4 பேர் மீது பண மோசடி, தீண்டாமை, வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: இந்திய கம்யூ. கட்சியின் அமைப்பு விதிகளுக்கு எதிராக செயல்பட்டவர் சி.மகேந்திரன்.. வீரபாண்டியன் காட்டம்!