மதுபோதையில் வெடித்த குடும்பத் தகராறு.. பெற்ற மகளையும், தாயையும் சரமாரியாக வெட்டி கொன்ற கொடூரம்.. தருமபுரியை உலுக்கிய துயரம்!
Dharmapuri Double Murder: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மதுபோதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், பெற்ற தாயை வெட்டிக்கொலை செய்து, தனது சொந்த மகளையும் கொடூரமாகத் தாக்கிய தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகளும் உயிரிழந்ததால், இச்சம்பவம் இரட்டைக்கொலை வழக்காக மாறியுள்ளது.
தருமபுரி, ஆகஸ்ட் 30: தருமபுரி மாவட்டத்தில் மதுபோதை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே மாபெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அதிகாரப்பட்டி அம்மன் நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் அவரது மனைவி ஷாலினிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களது 19 வயது மகள் சின்மயி, டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சின்மயி தனது பாட்டி உமாராணியுடன் ஒரு வீட்டிலும், தந்தை சுரேஷ் அருகிலேயே தனியாகவும் வசித்து வந்துள்ளனர்.
இதையும் படிக்க : டெல்லி ரயிலில் சூட்கேஸில் உடல் பாகங்கள்.. பிரியாணி டபராவில் மனித உடல் இருந்த வழக்கு.. முக்கிய குற்றவாளி கைது!
சாப்பாடு கொடுக்கச் சென்ற இடத்தில் வெடித்த தகராறு:
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சின்மயி தனது தந்தை சுரேஷிற்குச் சாப்பாடு கொடுப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, பிரிந்து வாழும் தாய் ஷாலினிக்கு ஆதரவாகப் பேசி சுரேஷிடம் சின்மயி நியாயம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், அதிகளவில் மது அருந்தியிருந்த போதையில், வீட்டில் இருந்த கொடுவாளை எடுத்துத் தனது சொந்த மகளான சின்மயியின் தலை மற்றும் முகத்தில் கொடூரமாக வெட்டியுள்ளார். மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பாட்டி உமாராணி, பேத்தியைக் காப்பாற்ற முயன்று சுரேஷைத் தடுத்துள்ளார்.
பாட்டி சம்பவ இடத்திலேயே பலி:
ஆத்திரம் தணியாத சுரேஷ், தடுக்க வந்த தனது பெற்ற தாய் உமாராணியையும் கொடுவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். கழுத்து மற்றும் தலையில் பலத்த காயமடைந்த உமாராணி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சின்மயியை அக்கம் பக்கத்தினர் மீட்டுப் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே, தகவலறிந்து வந்த ஏ.பள்ளிப்பட்டி காவல்துறையினர் உமாராணியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொடூரச் செயலில் ஈடுபட்ட சுரேஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிக்க : ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏவின் பேச்சு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அதிமுக அதிரடி பாய்ச்சல்!
இரட்டைக் கொலை வழக்காக மாற்றம்
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 வயது மாணவி சின்மயி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மகளும் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இச்சம்பவத்தை ஏ.பள்ளிப்பட்டி காவல்துறையினர் இரட்டைக் கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பெற்ற தாயையும் மகளையும் தந்தையே வெட்டிக்கொலை செய்த இச்சம்பவம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.