காவிரி விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி பிரமாணப் பத்திரம்.. விநாடிக்கு 22,000 கனஅடி நீர் திறக்க வலியுறுத்தல்!
Cauvery Water Dispute: காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. கர்நாடகாவிடம் இருந்து விநாடிக்கு 22,000 கனஅடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்றும், தற்போது வழக்கப்படும் 9,000 கனஅடி நீர் போதுமானதாக இல்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாகவும் விவசாயிகளின் பிரதான நீர் ஆதாரமாகவும் விளங்கும் காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில், கர்நாடக அரசு உரிய நீரைத் திறக்காததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து, பாசனப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் குறிப்பிட்ட மாதாந்திர நீர் பங்கீட்டு அட்டவணையின்படி கர்நாடகா உரிய நீரை வழங்கத் தவறி வருவதாக தமிழக அரசு தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் பாசனத் தேவைகளையும் குடிநீர் தேவைகளையும் கருத்தில் கொண்டு, காவிரி விவகாரத்தில் உடனடித் தலையீடு கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தற்போதைய நிலை குறித்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
இதையும் படிக்க: “ஜெயலலிதாவே சவால்களைச் சந்தித்தார்”.. முதல்வர் விஜய்க்கு ஆர்.எஸ். பாரதி சவால்.. வார்த்தைக்கு வார்த்தை வெடித்த சர்ச்சை!!
22,000 கனஅடி நீர் திறக்க தமிழகம் கோரிக்கை:
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிலை அறிக்கையில், கர்நாடகாவிடம் இருந்து விநாடிக்கு 22,000 கனஅடி வீதம் அடுத்த 15 நாட்களுக்குத் தொடர்ச்சியாக நீரைத் திறக்க உத்தவிட வேண்டும் என்று தமிழக அரசு மிக அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது. தற்போது வழங்கப்பட்டு வரும் விநாடிக்கு 9,000 கனஅடி நீர் என்பது தமிழகத்தின் பாசனத்திற்கு எந்தவிதத்திலும் போதுமானதாக இல்லை என்றும், இதனால் குறுவை மற்றும் சம்பா சாகுபடிப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலாண்மை ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு:
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், ஏற்கனவே தமிழகத்திற்கு வர வேண்டிய 17 டி.எம்.சி நிலுவை நீர் இன்னும் வந்து சேரவில்லை என்பதும், அதோடு சேர்த்து ஆகஸ்ட் மாதத்திற்கு முழுமையாக வழங்கப்பட வேண்டிய நீரும் கர்நாடகாவால் திறக்கப்படவில்லை என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் நியாயமான கோரிக்கைகளுக்கு மாறாகவும், மாநில விவசாயிகளின் நலனுக்கு விரோதமாகவும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருவதாகவும் தமிழக அரசு தனது குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளது.
இதையும் படிக்க : “கோயிலுக்கும் திமுகவினருக்கும் என்ன சம்பந்தம்?”.. அறங்காவலர் குழு நியமனம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பளார்!
உச்சநீதிமன்றத்தை எதிர்பார்க்கும் தமிழகம்:
மாதாந்திர அட்டவணையின்படி உரிய நீரைத் திறக்க கர்நாடக அரசுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் நிலுவை நீரை உடனடியாகப் பெற உச்சநீதிமன்றம் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பிரமாணப் பத்திரம், காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.