கண்ணை மறைத்த கள்ளக்காதல்…மாமனாருக்கு தீ வைத்த மருமகள்..பண்ருட்டியில் அரங்கேறிய கொடூரம்!
Cuddalore Crime: கடலூர் மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி, மாமனாரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொல்ல முயன்ற மருமகள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த நபர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயியான இவரது மகனுக்கும், ஜெயப்பிரியா என்ற பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ராஜேந்திரன் மகன் எதிர்பாராத விதமாக உயிரிழந்து விட்டார். இதனால், ஜெயப்பிரியா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெயப்பிரியா வேறு ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு நபரிடம் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த மாமனார் ராஜேந்திரன், தனது மருமகள் ஜெயப்பிரியாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஜெயப்பிரியா அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று ஜெயப்பிரியா தனது கள்ளக்காதலுடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த, ராஜேந்திரன் தனது மருமகள் ஜெயப்பிரியாவை கடுமையாக கண்டித்துள்ளார்.
மாமனார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மருமகள்
இதில், கடும் ஆத்திரம் அடைந்த ஜெயப்பிரியா தனது கள்ளக் காதலனை தொடர்பு கொண்டு இந்த விவகாரத்தை கூறியதாக தெரிகிறது. அப்போது, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் ராஜேந்திரனை தீர்த்துக் கட்டுவதற்கு முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதன்படி, சம்பவத்தன்று ஜெயப்பிரியா, அவரது கள்ளக்காதலன் உள்பட 4 பேர் சேர்ந்து புதுபிள்ளையார்குப்பம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மாமனார் ராஜேந்திரனை வழி மறித்து, அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளதாக தெரிகிறது. பின்னர், அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
மேலும் படிக்க: புதுச்சேரியில் தொழிலதிபரிடம் ரூ.5.5 கோடி சுருட்டிய மர்ம நபர்…ஒரே லிங்குதான் எல்லாம் போச்சு!
100 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை
இதில், ராஜேந்திரன் வெப்பம் தாங்காமல் கடுமையாக சத்தமிட்டார். மேலும், ராஜேந்திரன் உடல் கருகிய நிலையில் கீழே விழுந்தார். உடனே, அருகில் இருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு விவசாயி ராஜேந்திரன் மீது பற்றியிருந்த தீயை அணைத்து அவரை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் 100 சதவீதம் தீக் காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறினர்.
மருமகள் உள்பட 4 பேர் கைது
இதனால், அவர் தீவிர சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, விவசாயி ராஜேந்திரன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயப்பிரியா, அவரது கள்ளக்காதலன் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: சபரிமலை தங்க திருட்டு வழக்கு..நடிகர் ஜெயராமிடம் வாக்குமூலம்…பரபரப்பு தகவல்!



