சென்னையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்.. “10 நாட்களில் 2,000 பேருக்கு பாதிப்பு.. எச்சரிக்கும் மருத்துவர்கள்!..
Chennai Fever Spike: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் 2,000க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து மருத்துவர் பிரவீண் குமார் அளித்த முக்கிய எச்சரிக்கைகள் இதோ.
சென்னை, செப்டம்பர் 14: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களாக காலநிலை முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. பகல் நேரங்களில் கடுமையான வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது பெய்யும் மழையும் என சீதோஷ்ண நிலையில் தொடர் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த திடீர் காலநிலை மாற்றத்தின் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு தொற்றின் தாக்கம் கணிசமாக அதிகரித்து பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள் – போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
10 நாட்களில் 2,000 பேருக்கு காய்ச்சல்:
கடந்த 10 நாட்களில் மட்டும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக அடையாறு, அண்ணாநகர் மற்றும் வளசரவாக்கம் ஆகிய மாநகராட்சி மண்டலங்களில் டெங்கு தொற்றின் பாதிப்பு மற்ற இடங்களை விட மிக அதிகமாக பதிவாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மனிதர்களின் இயல்பான நோய் எதிர்ப்பு சக்தி கணிசமாக குறைந்திருப்பதே, இதுபோன்ற வைரஸ்கள் மிக வேகமாக பரவுவதற்கு முதன்மை காரணமாக அமைகிறது என மருத்துவ வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சென்னையில் தீவிரமடையும் புதிய வைரஸ் தொற்றுகள்
தற்போது சென்னையில் இன்புளூயன்சா ஏ, ரினோ மற்றும் ஆர்.எஸ்.வி போன்ற பல்வேறு வகையான வைரஸ் தொற்றுகள் தீவிரமாக பரவி வருகின்றன. இதனால் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டாலும், அது உடனடியாக மற்ற உறுப்பினர்களுக்கும் பரவி ஒட்டுமொத்த குடும்பத்தையும் முடக்கும் நிலையை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் காய்ச்சலால் உடனடி உயிராபத்து எதுவும் இல்லை என்றாலும், காய்ச்சல் ஏற்படும் முதல் 4 நாட்களுக்கு கடுமையான தொண்டை வலி மற்றும் உடல் சோர்வு நோயாளிகளை பாடாய்ப்படுத்துகிறது.
மேலும் படிக்க: “மேடை போட்டு ஆபாசமாக பேசுவதுதான் கடைசி ஆயுதமா?”.. மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி!!
டெங்கு அறிகுறிகள்.. மருத்துவர் அளித்த எச்சரிக்கை:
இதுகுறித்து விரிவாக விளக்கமளித்த மருத்துவர் பிரவீண் குமார், “இந்த வைரஸ் தொற்றுகளின் தாக்கம் காய்ச்சல் குணமடைந்த பின்னரும் கூட நீடிக்கிறது. காய்ச்சல் குறைந்த நிலையிலும் 10 முதல் 15 நாட்களுக்கு இருமல் மற்றும் கடுமையான உடல் சோர்வு நோயாளிகளைத் தொடர்கிறது. அதேபோல டெங்கு என்பது கொசுக்களின் மூலம் பரவக்கூடிய ஒரு வைரஸ் தொற்றாகும். தீவிர காய்ச்சல், கடுமையான தசை வலி, உடல் வலி, அதிகப்படியான சோர்வு மற்றும் கண்களின் பின்பகுதியில் ஏற்படும் கடுமையான தலைவலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும்” என்று தெரிவித்துள்ளார்.