AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னையின் 2-வது விமான நிலையம்.. 2 புதிய இடங்களை தேர்வு செய்த தவெக அரசு.. எங்கு தெரியுமா?

Chennai Second Airport: சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்கும் திட்டத்தை கைவிட்ட தவெக அரசு, தற்போது செய்யூர் அல்லது கும்மிடிப்பூண்டி அருகே புதிய இடத்தை தேர்வு செய்து ஆய்வு நடத்துமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இதற்கான சவால்கள் மற்றும் விரிவான பின்னணி குறித்த செய்தித் தொகுப்பு.

சென்னையின் 2-வது விமான நிலையம்..  2 புதிய இடங்களை தேர்வு செய்த தவெக அரசு.. எங்கு தெரியுமா?
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 06 Sep 2026 08:23 AM IST

சென்னை, செப்டம்பர் 06: தமிழகத் தலைநகரான சென்னையின் உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் வான்வழிப் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்டகாலத் தேவையாகவும் கனவாகவும் இருந்து வருகிறது. முந்தைய ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இந்தச் பசுமைப் புல விமான நிலையத்தை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. எனினும், அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் உரைநிகழ்த்திய முதலமைச்சர் ஜோசப் விஜய், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் முழுமையாகக் கைவிடப்பட்டு, மாற்று இடத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த முக்கிய அறிவிப்பு வெளியாகி ஒரே வாரத்திற்குள், புதிய இடங்களைக் கண்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.

இதையும் படிக்க: தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்.. பயணிகள் விரைந்து முன்பதிவு செய்ய தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்!!

விமான நிலைய ஆணையத்திற்கு கடிதம்:

பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள தவெக அரசு சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காகப் புதிய இடங்களை அடையாளம் கண்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டிக்கு அருகில் உள்ள மணலூர் ஆகிய இரு இடங்களை ஆய்வு செய்யுமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழக அரசு முறைப்படி கடிதம் எழுதியுள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் சாத்தியக்கூறுகளுக்கு முந்தைய ஆய்வை விரைந்து நடத்துமாறு கோரப்பட்டுள்ளது. மேலும், ‘டிட்கோ’ குழுவினர் இந்த இரு பகுதிகளிலும் ஏற்கனவே முதற்கட்ட கள ஆய்வை நடத்தி முடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூரப் பின்னணியும் தொழில்நுட்பச் சவால்களும்:

தற்போது இயங்கி வரும் சென்னை மீனம் பாக்கம் விமான நிலையத்திலிருந்து செய்யூர் பகுதி சுமார் 100 கிலோமீட்டர் தொலைவிலும், கும்மிடிப்பூண்டி மணலூர் பகுதி சுமார் 75 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன. கைவிடப்பட்ட பரந்தூர் பகுதி மீனம் பாக்கத்திலிருந்து 58 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய இடங்களை இந்திய விமான நிலைய ஆணையம் பரிந்துரைத்தாலும், பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகளிடம் இருந்து சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புச் சான்றுகளைப் பெறுவதில் கணிசமான சவால்கள் உள்ளன. செய்யூர் பகுதி தாம்பரம் விமானப்படை தளத்தின் வான்வெளி எல்லைக்குள் வருவதால், அங்கு விமான நிலையம் அமைக்கப் பாதுகாப்பு அமைச்சகத்தின் தடையில்லாச் சான்று அவசியமாகிறது. அதேபோல, மணலூர் பகுதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து வெறும் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால் அங்கேயும் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்புச் சவால்கள் நீடிக்கின்றன.

இதையும் படிக்க: Tamil Nadu Weather Alert: ஒருபக்கம் வெயில்.. மறுபக்கம் மழை.. தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கான வானிலை நிலவரம் இதோ!

திட்டத்தின் எதிர்காலக் காலக்கெடு:

இந்திய விமான நிலைய ஆணையத்தின் வல்லுநர் குழு விரைவில் இந்த இரு இடங்களுக்கும் நேரில் சென்று விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட இன்னும் சில மாதங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. ஆணையம் வழங்கும் சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில் இறுதி இடம் முடிவு செய்யப்படும். ஒருவேளை செய்யூர் அல்லது மணலூரில் ஏதேனும் ஒரு இடத்தை ஆணையம் இறுதி செய்தாலும், நிலம் கையகப்படுத்துதல், அனுமதிகள் பெறுதல் மற்றும் கட்டுமானப் பணிகளை முடித்து இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வர குறைந்தபட்சம் 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகலாம் எனத் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகால இழுபறிக்குப் பின் பரந்தூர் திட்டத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், அத்திட்டம் கைவிடப்பட்டு மீண்டும் முதலிலிருந்தே பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால், சென்னையின் 2-வது விமான நிலையக் கனவு மேலும் ஒரு நீண்ட இழுபறியை நோக்கி நகர்ந்துள்ளது.

Follow Us