வெயிலின் தாக்கம்: பட்டாசு ஆலைகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்
Centre Imposes Restrictions on Firecracker Manufacturing : கடும் வெயில் மற்றும் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள சூழலில், விபத்துகளைத் தவிர்க்க விருதுநகர் மாவட்ட பட்டாசு ஆலைகளுக்கு மத்திய அரசு புதிய நேரக் கட்டுப்பாடுகளையும் பாதுகாப்பு விதிமுறைகளையும் விதித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனையடுத்து தமிழ்நாட்டில் ஆங்காங்கே பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் நடைபெற்று வருகின்றன. விருதுநகர் கட்டனார்பட்டி என்ற கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 25 பேர் வரை உயிரிழந்தனர். முதற்கட்ட விசாரணையில் விதிமுறைகளை மீறி ஞாயிற்றுக்கிழமைகளில் பட்டாசு ஆலை செயல்பட்டது தெரிய வந்தது. மேலும் 11 மணி முதல் 3 மணி வரை கடுமையான மருந்துகளை வைத்து பட்டாசு தயாரிக்கக் கூடாது என்ற விதி இருக்கும் நிலையில் அதனை மீறி பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதனையடுத்து ஆலையின் உரிமையாளர் முத்துமாணிக்கம் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மேலும் ஏப்ரல் 25, 2026 அன்று தேனி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இப்படி தொடரும் விபத்துகளால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது மே 4, 2026 முதல் அக்னி நட்சத்திரம் துவங்கும் நிலையில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பட்டாசு ஆலைகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இதையும் படிக்க : மிரட்ட வரும் மே மாதம்.. 40 டிகிரி வரை எகிறும் வெப்பநிலை.. உஷாரா இருங்க மக்களே.. எச்சரிக்கும் பிரதீப் ஜான்!




அதன் படி, அதிக அபாயகரமான ரசாயனக் கலவை தயாரிக்கும் பணிகளைக் காலை 6 மணிக்குத் தொடங்கி 10 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என ஆலை நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரையிலான உச்சகட்ட வெப்பம் நிலவும் நேரத்தில் எக்காரணம் கொண்டும் பணியாளர்களைப் பட்டாசு தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதுடன், மொத்தமாகப் பட்டாசு வாங்குபவர்களின் விவரங்கள் மற்றும் அடையாள அட்டைகளைச் சேகரித்து வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளை மீறும் ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்யப் பரிந்துரைக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிக்க : ஆட்டோ LPG எரிவாயு தட்டுப்பாடு? இந்திய எண்ணெய் நிறுவனம் கொடுத்த விளக்கம்!!
விருதுநகர் மாவட்டத்தில் குறிப்பாக சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பணியாற்றி வருகின்றனர். விருதுநகர் கந்தக பூமி என்பதால் அங்கு விவசாயம் பெரிய அளவில் கைகொடுப்பதில்லை. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அதிக அளவில் ஆபத்து நிறைந்த பட்டாசு தொழிலை நம்பி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை.