“கோயிலுக்கு வருவது மன அமைதிக்காகத்தான்!”.. செப்.1 முதல் செல்போன்களுக்கு தடை.. ஸ்டிரிக்ட்டாக சொன்ன அமைச்சர் ரமேஷ்!!
Cellphones Banned in Tamil Nadu Temples: தமிழகத்தில் உள்ள முதன்மை திருக்கோயில்களில் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கும் வகையில், வரும் செப்.1ம் தேதிக்குள் பாதுகாப்பான செல்போன் வைப்பகங்கள் அமைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
திருச்சி, ஆகஸ்ட் 09: திருக்கோயில்களின் பாதுகாப்பு, புனிதத்தன்மை மற்றும் கருவறைப் பகுதிகளின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகத் தமிழக அரசு எடுத்து வரும் புதிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
இதையும் படிக்க: தவெகவில் அடுத்தடுத்து அதிரடி மாற்றம்.. மேலும் 27 புதிய மாவட்ட அமைப்புகள் உருவாக்கம்.. புதிய மா.செக்கள் நியமனம்!!
செப்டம்பர் 1 முதல் செல்போன் வைப்பகங்கள்:
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், “கோயில்களுக்குள் மொபைல் போன்களை அனுமதிக்கக் கூடாது என்று ஏற்கனவே நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. இருப்பினும் கடந்த காலத்தில் இத்திட்டம் சரியாகச் செயல்படுத்தப்படவில்லை. தற்போது கருவறை வரை சென்று வீடியோக்கள் எடுப்பதும், அதைச் சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் முதல் கட்டமாகத் தமிழகத்தில் உள்ள முதுநிலை (முதன்மையான) திருக்கோயில்களைத் தேர்வு செய்துள்ளோம். அங்குப் போதிய இடவசதியும் நிதியும் இருப்பதால், வரும் செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை ஒப்படைப்பதற்கான ‘மொபைல் கவுண்டர்கள்’ அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
கேலி கிண்டல்களுக்குப் பதிலடி:
இத்திட்டம் குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தை மீண்டும் அறிவிப்பதாகச் சிலர் கேலி கிண்டல் செய்து பேசுகிறார்கள். ஒரு திட்டம் காகிதத்தில் இருப்பதை விட அதை எவ்வாறு களத்தில் மிகத் துரிதமாகச் செயல்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். கடந்த ஆட்சியில் இத்தடைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால், வரும் செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் அனைத்து முதுநிலை கோயில்களிலும் செல்போன் கவுண்டர்கள் அமைக்கப்பட்டவுடன், பொதுமக்கள் கோயில்களுக்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல முழுமையான தடைகள் கொண்டுவரப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க: பழனி நில முறைகேடு வழக்கு குற்றவாளி சிறை மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.. தவாக வேல்முருகன்!
பக்தர்களுக்கும் ஊடகங்களுக்கும் கோரிக்கை:
தொடர்ந்து பக்தர்கள் மற்றும் ஊடகங்களுக்குக் கோரிக்கை விடுத்த அமைச்சர், “நாம் கோயிலுக்குச் செல்வது இறைவனைத் தரிசிப்பதற்கும், மனநிறைவு மற்றும் மன அமைதியைப் பெறுவதற்கும்தான். அப்படி இருக்கும்போது கோயிலுக்குள் செல்போன்களைப் பயன்படுத்துவது, புகைப்படம் எடுப்பது மற்றும் வீடியோக்கள் எடுப்பது முற்றிலும் தேவையற்ற ஒன்றாகும். கோயிலுக்குள் நுழையும் போது நமது எண்ணங்களும் கவனமும் இறைவன் மீதும், நாம் வைத்த பிரார்த்தனைகள் மீதும் மட்டுமே இருக்க வேண்டும்” என்று உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டார்.