கோவையில் பகீர்.. கத்தி முனையில் 1.25 கிலோ தங்கக் கட்டிகளை திருடிய கும்பல்.. நடுரோட்டில் நடந்த சம்பவம்!
Coimbatore Crime News : கோவை நெடுஞ்சாலையில் காரில் சென்ற நகை வியாபாரியை வழிமறித்து, அவர் வைத்திருந்த 1.25 கிலோ தங்கக் கட்டிகள் கும்பல் கொள்ளையடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 பேர் கொண்ட கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

கோவை, ஜூன் 15 : கோவை தேசிய நெடுஞ்சாலையில் கேரளாவைச் சேர்ந்த நகை வியாபாரியிடம் கொள்ளை கும்பல் கத்தியை காட்டி மிரட்டி 1.25 கிலோ தங்கக் கட்டிகளை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பாலக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப் (55). இவர் கோவையில் இருந்து தனது சொந்த ஊருக்கு அவரது ஊழியர் விஷ்ணுவுடன் காரில் சென்றுக் கொண்டிருந்தார். முன்னதாக, சென்னையில் உள்ள சில கடைகளில் இருந்து 1.25 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளை வாங்கிவிட்டு, சென்னையில் இருந்து ரயிலில் கோவைக்கு ஜெய்சன் ஜேக்கப் வந்திருந்தார்.
கத்திமுனையில் தங்க கட்டிகளை திருடிய கும்பல்
பின்னர், அங்கிருந்து இருவரும் காரில் கேரளா சென்றுக் கொண்டிருந்தனர். பாலக்காடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே இருவரும் சென்றபோது, ஒரு லாரி காரை வழிமறித்தது. இதையடுத்து, அந்த கும்பல் கார் கண்ணாடியை உடைத்து காரின் கதவை திறந்துள்ளது.
பின்னர், அந்த கும்பல் அந்த காரில் ஏறிக் கொண்டு, ஜெய்சன் ஜேக்கப் கழுத்தில் கத்தியை வைத்து தங்கக் கட்டிகள் தர வேண்டும் என கேட்டுள்ளது. தங்களிடம் தங்கத்தை கொடுத்துவிடு, இல்லையென்றால் கொலை செய்துவிடுவோம் எனவும் மிரட்டி இருக்கிறது.




இதனால், அதிர்ச்சி அடைந்த ஜெய்சன் தங்கக் கட்டிகள் சீட்டுக்கு அடியில் இருப்பதாக கூறினார். இதனை அடுத்து, அந்த கொள்ளை கும்பல் தங்கக் கட்டிகளை கொள்ளையடித்தது. இதனை அடுத்து, ஜெய்சன் மற்றும விஷ்ணுவை கடுமையதாக தாக்கி நடுரோட்டில் விட்டு சென்றுவிட்டு, காருடன் அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச் சென்றது.
கேரளா விரைந்த தனிப்படை
இதனை அடுத்து, அவ்வழியாக சென்றவர்களின் உதவியால் இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோவை எஸ்பி கே கார்த்திகேயன் கூறுகையில், ” கொள்ளை கும்பல் மலையாளத்தில் பேசியதால் அவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என நாங்கள் சந்தேகிக்கிறோம். ஜெய்சன் காரில் வைத்திருந்த ரூ.60,000 பணத்தையும் அந்தக் கும்பல் எடுத்துச் சென்றது. அவர்களை விரைவில் கைது செய்வோம். கொள்ளை கும்பலை பிடித்த தனிப்படை கேரளாவுக்கு விரைந்துள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்க கேரள காவல்துறையுடன் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்” என்றார்.