மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி.. முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கைது..
Crime: வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் ஜூன் 13 2025, இரவு அங்கிருந்த காவலரை பிரபல கொலை குற்றவாளியான போராளி பிரபாகரன் (எ) பிரபாகரன் தனது கூட்டாளியுடன் சென்று காவல் நிலையத்தை சூறையாடி உள்ளார். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் ( (Sathirapatti Police Station) ) ஜூன் 13 2025, இரவு காவல் நிலையத்தில் இருந்த காவலரை பிரபல கொலை குற்றவாளியான போராளி பிரபாகரன் (எ) பிரபாகரன் தனது கூட்டாளியுடன் சென்று காவல் நிலையத்தை சூறையாடி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் சத்திரப்பட்டி அருகே கண்மாய் கரையில் மர்மமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான போராளி பிரபாகரன் (எ) பிரபாகரன் காவல்துறையினர் வழக்கம்போல் சோதனை செய்ய வீட்டுக்குச் சென்றபோது வீட்டில் இல்லாததால் அவரது தந்தையை காவல்துறையினர் விசாரித்து மிரட்டியதாக கூறப்படுகிறது.
காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய ரவுடி:
தான் வீட்டில் இல்லாத போது காவல்துறையினர் அத்துமீறி உள்ளே நுழைந்து., தனது தந்தையை மிரட்டியதாக கூறி கொலை குற்றவாளியான போராளி பிரபாகரன் தனது கூட்டாளியுடன் நேற்று (ஜூன் 13 2025) இரவு மது போதையில் காவல் நிலையத்திற்குச் சென்று அங்கு பணியில் இருந்த காவலரை மிரட்டிய நிலையில், காவலர் தப்பிக்க அங்கு உள்ள அறையில் பூட்டிக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து., ஆத்திரமடைந்த போராளி பிரபாகரன் தனது கூட்டாளியுடன் காவல் நிலையத்தில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி அங்கிருந்து தப்பித்தார். இந்நிலையில் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர் பி உதயகுமார் சம்பவம் அறிந்து காவல் நிலையத்தை சென்று பார்வையிட முற்பட்டபோது பேரையூர் காவல்துறையினர் மற்றும் உசிலம்பட்டி காவல்துறை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி , கல்லுப்பட்டி பேரையூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு, ஆர் பி உதயகுமாரை சந்தித்து ஆறுதல் கூறி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; ” திருமங்கலம் தொகுதியில் உள்ள சத்திரப்பட்டி காவல் நிலையத்தை சமூகவிரோதிகள் அடித்து நொறுக்கி உள்ளனர், அந்த காவலர் உயிருக்கு அச்சுறுதல் செய்துள்ளனர், இன்றைக்கு காவல்துறை நிலையத்தில் நடைபெற்ற செயல் வெட்கக்கேடான செயல்,
தொகுதிக்கு நல்லது ,கெட்டது என்றால் யார் பொறுப்பு அது சட்டமன்ற உறுப்பினர் கடமை அல்லவா? ஆனால் அந்தக் கடமையை செய்யக்கூட தடுக்கிறது ஸ்டாலினின் திமுக அரசு .இன்றைக்கு திமுக ஆட்சியில் ரவுடிகள் சுதந்திரமாக இருக்கிறார்கள். இதுதான் நிதர்சனமான உண்மை. இதை கட்டுப்படுத்த தவறிய அரசாக திமுக அரசு உள்ளது. இன்றைக்கு மக்களை காக்கும் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகின்றது ஆனாலும் நாங்கள் மக்களுக்காக குரல் கொடுத்தும் இப்போது காவல்துறைக்காவும் குரல் கொடுக்கிறோம்” எனக் கூறினார்.