பறவை காய்ச்சல் எதிரொலி..பண்ணைகளில் கால்நடைத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!
Bird Flu Spread : சென்னையில் காகங்களுக்கு பறவை காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால் கோழி மற்றும் வாத்து பண்ணைகளில் கால்நடைத்துறை சார்பில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், பண்ணைகளில் பயோ செக்யூரிட்டி நடவடிக்கை உள்பட பல்வேறு அறிவுறுத்துல்கள் வழங்கப்பட்டுள்ளன .
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் சந்தேகத்துக்கிடமாக வகையில் காகங்கள் உயிரிழந்த கிடந்தன. இந்த காகங்களை கால்நடை துறை மீட்டு போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்த காகங்களுக்கு ஹெச் 5 என் பி வைரஸ் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னையில் காகங்களுக்கு பறவை காய்ச்சல் பரவி இருப்பதாக கால்நடை துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. பின்னர், கால்நடை துறை சார்பில் பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் பறவைகள் இடையே காய்ச்சலை உருவாக்கும் ஹெச் 5 என் பி வைரஸ்கள் இடம் விட்டு இடம் மாறும் காகங்கள், கொக்குகள், புறாக்கள், நாரைகள் மூலமாக மற்ற பகுதியில் உள்ள பறவைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதனால், பண்ணைகளில் அடைத்து வைத்து வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் வாத்துக்களுக்கும் இந்த பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், அரிதாக மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் ஆயிரம் கோழி பண்ணைகளில் 6 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் மற்றும் சுமார் 2 கோடிக்கும் அதிகமான கறிக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த கோழி பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிப்பகுதியை சேர்ந்த நபர்கள் மற்றும் வாகனங்கள் உள்ளே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அதிகாலையில் கொட்டும் பனி.. எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வானிலை அப்டேட் இதோ!!




பண்ணைகளில் பயோ செக்யூரிட்டி நடவடிக்கை
மேலும், இந்த கோழி பண்ணைகளில் பயோ செக்யூரிட்டி நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டதுடன், பண்ணை வளாகங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பண்ணைகளில் பணி புரியும் நபர்கள் முகக் கவசம், கையுறைகள் அணிய வேண்டும் எனவும், சந்தேகத்துக்கிடமான வகையில் பறவைகள் உயிரிழந்தால் கால்நடைத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கறிக்கோழிகள் மற்றும் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே, நாமக்கல் மண்டலத்தில் சுகாதாரமான முறையில் கோழி பண்ணைகள் அமைக்கப்பட்டு நடத்தி வரப்படுகிறது.
கோழிகள்-முட்டைகள் ஏற்றுமதி இறக்குமதி நிறுத்தம்
இதனால், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கோ அல்லது சென்னையில் இருந்து நாமக்கல்லுக்கோ கறிக்கோழிகள் மற்றும் முட்டைகள், தீவனங்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு கட்டுப்பாடுகள் உள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் பறவை காய்ச்சல் நோய் ஏற்பட வாய்ப்பு குறைவு என பண்ணையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும், அந்தப் பண்ணைகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மதுரை அதிமுக பிரமுகர் கொலைக்கு இதுதான் காரணம்…போலீசார் பரபரப்பு விளக்கம்!