படு வேகமாக பரவும் பறவை காய்ச்சல்… 14 மாவட்டங்களில் பாதிப்பு… சுகாதாரத்துறை விடுத்த அலர்ட்!
Bird Flu Infections: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் தொற்று பரவி இருப்பதாகவும், இந்த தொற்று மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இருப்பதாகவும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இதற்கான பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கேரளாவில் கடந்த சில மாதங்களாக பறவை காய்ச்சல் தொற்று பரவி வந்த நிலையில், மாநில எல்லையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் சென்னையில் அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மர்மமான முறையில் காகங்கள் உயிரிழந்தன. இதனை அறிந்த கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் இறந்த காலங்களை மீட்டு போபாலில் உள்ள மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைத்ததில், அந்த காகங்களுக்கு H5N1 என்ற பறவை காய்ச்சல் தொற்று இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, சென்னையில் பறவை காய்ச்சல் பரவி இருப்பதாகவும், அண்டை மாவட்டங்களில் பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக கோழிப்பண்ணைகள் மற்றும் வாத்து பண்ணைகள் ஆகியவற்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை கூறி இருந்தது.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் தொற்று
இதேபோல, பொதுமக்களும் தீவிர முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் மர்மமான முறையில் காகங்கள் உயிரிழந்து கிடந்தன. இதனால், அங்கேயும் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டதாக பீதி கிளம்பியது. இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், சேலம், மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் காகங்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. இதனால், இந்த மாவட்டங்களில் பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது.
மேலும் படிக்க: நடுவானில் விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறல்.. மது போதையில் திமுக கவுன்சிலர்-வக்கீலின் ஒழுங்கீன செயல்!




மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட வாய்ப்பு
எனவே, மாநில சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பறவை காய்ச்சல் தொற்று பாதிக்கப்பட்டுள்ள கோழிகள் மற்றும் பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது. பறவைகளின் கழிவுகளின் மூலமாகவும் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதே போல. தொற்று பாதிக்கப்பட்ட பறவை மற்றும் மனிதர்களிடமிருந்து மற்றொரு நபருக்கு ” வெஸ்ட் நைல் வைரஸ்” பாதிப்பை கொசுக்கள் கடத்தும் என்பதால் நோய் பரவல் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
பறவை காய்ச்சல் தொற்றின் அறிகுறிகள்
இந்த தொற்றின் மூலம், தலைவலி, காய்ச்சல், இருமல், தசைப்பிடிப்பு, மூச்சு திணறல் ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்கள் அணுக வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காகங்கள் உயிரிழந்திருந்தாலும், மனிதர்களிடம் பறவை காய்ச்சல் தொற்று கண்டறியப்படவில்லை. அதே நேரத்தில், காகங்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உயிரிழந்த காகங்களை வெறும் கைகளால் அப்புறப்படுத்த கூடாது என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: திருநெல்வேலி இரட்டை கொலை சம்பவம்… சிறையில் இருந்து திட்டம் தீட்டியல் கும்பல்… பரபரப்பு பின்னணி!