ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… 12 பேர் ஜாமீன் திடீர் ரத்து… நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு!
Armstrong Murder Case: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய 12 பேரின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வருகிற மார்ச் 6- ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர், கடந்த 2024- ஆம் ஆண்டு ஜூலை 5- ஆம் தேதி சென்னை, பெரம்பூர் வேணுகோபால் சாமி கோவில் தெருவில் தான் கட்டி வரும் புதிய வீட்டை பார்வையிட சென்ற போது, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 27 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடை சிலர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதில், உடல் நலக்குறைவு காரணமாக ரவுடி நாகேந்திரன் உயிரிழந்தார். இந்த நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 12 பேருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் வழங்கி இருந்தது. இந்த நிலையில், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி தனக்கும் ஜாமின் வழங்கு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்றத்தில் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல்
ஏற்கனவே 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும், காவல் துறை தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்களானது நீதிபதி கே ராஜசேகர் முன்பு இன்று வெள்ளிக்கிழமை ( பிப்ரவரி 27) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி தரப்பில் இருந்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் படிக்க: பள்ளி மாணவர்களிடேயே ஏற்பட்ட தகராறு… சிறுவனை கொலைசெய்த மர்ம கும்பல்




காவல்துறை தரப்பில் ஜாமீன் ரத்து செய்ய கோரிக்கை
அப்போது, காவல்துறை சார்பில், குற்றச்சாட்டு பதிவு கட்டத்தில் இருக்கும் நிலையில், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தரப்பில், ஏற்கனவே 12 பேருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
12 பேரின் ஜாமீன் ரத்து- நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு
இதனை கேட்ட நீதிபதி கே. ராஜ சேகர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே உள்ள 12 பேரின் ஜாமினை ரத்து செய்வதுடன், அவர்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வருகிற மார்ச் 6- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சரணடையுமாறு உத்தரவிட்டார். இதனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் நீதிமன்றத்தில் சரணடையும் பட்சத்தில் மீண்டும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
மேலும் படிக்க: தமிழகத்தை உலுக்கிய மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… மார்ச் 7- இல் வெளியாகிறது தீர்ப்பு!