படிக்காமல் நண்பர்களுடன் சுற்றி வந்த 8ம் வகுப்பு மாணவன்.. பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு..
Tragic incident in cuddalore: நேற்று முன்தினம் இரவும் படிக்காமல் நண்பர்களுடன் சேர்ந்து திவாகர் சுற்றியுள்ளான். அதன்பிறகு பெற்றோர் திட்டுவார்களோ என்ற அச்சத்தில் அவன் வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார். தொடர்ந்து, இரவு முழுவதும் மகன் வீட்டிற்கு வராததால் நேற்று காலை பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் சென்று தேடினர்.
கடலூர், பிப்ரவரி 27: விருத்தாசலம் அருகே படிக்காமல் நண்பர்களுடன் சுற்றியதை பெற்றோர் கண்டித்ததால் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நவீன உலகில், கல்விப் போட்டி மற்றும் சமூக மாற்றங்கள் காரணமாக மாணவர்கள் அதிகப்படியான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நல்வாழ்வுக்காகவும், ஒழுக்கத்திற்காகவும் காட்டும் அக்கறை சில நேரங்களில் ‘கண்டிப்பாக’ உருமாறுகிறது. அவ்வாறு பெற்றோரின் கண்டித்தலை கூட, ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்றைய மாணவர்களிடம் குறைந்து வருகிறது. சிறு கண்டிப்பைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியாமல், பயம் அல்லது கோபத்தின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறுவது அல்லது தற்கொலை போன்ற விபரீதமான முடிவுகளை எடுக்கும் போக்கு அதிகரித்து வருவது சமூகத்தின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
இதையும் படிக்க: தந்தையை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய மகன்.. பகீர் வாக்குமூலம்!
நண்பர்களுடன் சுற்றிய மாணவன்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விஜயமாநகரம் புதுவிளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன்(38). லாரி டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி(36). இந்த தம்பதிக்கு திவாகர்(13) என்ற மகன் இருந்தார். இந்நிலையில், மாணவன் திவாகர், பெரிய வடவாடியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். அவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தாமல், மதிப்பெண்கள் குறைவாக பெற்றதுடன், நண்பர்களுடன் சுற்றி வந்ததால் பெற்றோர் கடுமையாக கண்டித்துள்ளனர்.
வீட்டிற்கு திரும்பாத மாணவன்:
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் படிக்காமல் நண்பர்களுடன் சேர்ந்து திவாகர் சுற்றியுள்ளான். அதன்பிறகு பெற்றோர் திட்டுவார்களோ என்ற அச்சத்தில் அவன் வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார். தொடர்ந்து, இரவு முழுவதும் மகன் வீட்டிற்கு வராததால் நேற்று காலை பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் சென்று தேடினர். அதோடு, திவாகரின் நண்பர்களிடமும் விசாரித்தனர்.
ரயிலில் அடிபட்டு மாணவன் பலி:
இதனிடையே பூவனூர் ரயில் நிலையம் அருகில் ரயிலில் அடிபட்டு சிறுவன் இறந்து கிடப்பதாக விருத்தாசலம் ரயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது திவாகர் என்பது தெரிந்தது.
இதையும் படிக்க: சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை.. அதிரடி தீர்ப்பு!!
தற்கொலை என்பதை உறுதி செய்த போலீசார்:
இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், மாணவன் திவாகர் தலை நசுங்கி இறந்து கிடந்ததை வைத்து பார்க்கும்போது ரயில் வருவதை அறிந்து தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)