சிறுமிக்கு சட்டவிரோத கருக்கலைப்பு முயற்சி.. ரகளையில் ஈடுபட்ட இன்ஸ்டா பிரபலம் கைது.. திருவள்ளூரில் அதிர்ச்சி!!
அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் 'கயல் விழிகன்' என்ற வாலிபர் இருப்பது தெரியவந்துள்ளது. இவர் ஏற்கனவே அந்தச் சிறுமியைப் போக்சோ சட்டத்தின் கீழ் கர்ப்பமாக்கிய வழக்கில் கைதாகிச் சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர், ஜுன் 10: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில், காதலனால் கர்ப்பமாக்கப்பட்ட சிறுமி ஒருவருக்குச் சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்ய முயன்றதோடு, அதனைத் தடுத்த மருத்துவர்களிடம் கடுமையான ரகளையில் ஈடுபட்ட இன்ஸ்டாகிராம் பெண் பிரபலம் மதுமிதா என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ராமஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மதுமிதா. இவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வரும் பெண் பிரபலம் ஆவார். இந்நிலையில், தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்ததன் காரணமாகக் கர்ப்பமடைந்த சிறுமி ஒருவரைச் சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்வதற்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மதுமிதா அழைத்துச் சென்றுள்ளார்.
இதையும் படிக்க: போதை ஊசி செலுத்திய இளம்பெண் பலி.. காதலன் உட்பட இருவர் கைது.. திருச்சியில் பயங்கரம்!!
மருத்துவர்களுடன் ரகளை:
மருத்துவமனையில் சிறுமிக்கு ஸ்கேன் எடுக்கும் அறைக்குச் சென்றபோது, அங்கிருந்த மருத்துவர்கள் மதுமிதாவிடம் “நீங்கள் யார்?” என விசாரித்துள்ளனர். அதற்கு மதுமிதா, தன்னை அந்தச் சிறுமியின் “தாய்” எனப் பொய் கூறி ஏமாற்ற முயன்றுள்ளார். மதுமிதாவின் பேச்சில் சந்தேகமடைந்த மருத்துவர்கள், அவர் கூறுவது பொய் என்பதைக் கண்டுபிடித்து அவரை எச்சரித்து மருத்துவமனையை விட்டு வெளியேற்ற முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த மதுமிதா, மருத்துவர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் குதித்தார்.
போலீசார் அதிரடி கைது:
இதனைத் தடுத்து நிறுத்த முயன்ற மருத்துவமனை முதல்வர் மோகன் காந்தியிடமும் அவர் அத்துமீறிப் பிரச்சனை செய்தார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு பணியில் இருந்த உதவி மருத்துவர் சிவகாம சுந்தரி இதுகுறித்து திருவள்ளூர் டவுன் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட மதுமிதாவை அதிரடியாகக் கைது செய்தனர். திருமணமாகாத காதலனால் கர்ப்பமான சிறுமிக்குச் சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்ய முயன்றது, அரசு மருத்துவர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னணியில் போக்சோ குற்றவாளி:
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ‘கயல் விழிகன்’ என்ற வாலிபர் இருப்பது தெரியவந்துள்ளது. இவர் ஏற்கனவே அந்தச் சிறுமியைப் போக்சோ சட்டத்தின் கீழ் கர்ப்பமாக்கிய வழக்கில் கைதாகிச் சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறையிலிருந்து வெளிவந்த பின்னரும், அவர் மீண்டும் அந்தச் சிறுமியிடம் எல்லை மீறி உடல் ரீதியாக மோசமான நிலைக்குத் தள்ளியதாகக் கூறப்படுகிறது.
அடிக்கடி சிறை செல்லும் ‘ஜெயில் பறவை’:
கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்டா பிரபலம் மதுமிதா, ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிச் சிறைக்குச் சென்றவர் ஆவார். கடந்த காலத்தில் பொது இடத்தில் பள்ளி மாணவிகளிடம் ரகளையில் ஈடுபட்ட வழக்கில் கைதாகி சிறை சென்றுள்ளார். உள்ளூர் கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர்களுடன் நட்பு வைத்துக்கொண்டு தொடர்ந்து சமூக விரோத அட்டூழியங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மற்றொரு சம்பவத்தில், திருவாலங்காடு காவல் நிலையத்திற்குள் அமர்ந்துகொண்டு புகார் எழுதுவது போல ஆபாசமான ரீல்ஸ் வெளியிட்டு, அதில் “ஒருத்தரையும் விடமாட்டேன்” என ஒருமையில் பேசி பெரும் சர்ச்சையைக் கிளப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சிவகங்கையில் மாணவன் கொலை வழக்கில் திருப்பம் – போக்சோ வழக்காக மாற்றம் – அதிர்ச்சி தகவல்
இந்தச் சம்பவத்தில் சிறுமிக்கும் மதுமிதாவிற்கும் உள்ள நேரடித் தொடர்பு என்ன, சிறுமியின் பெற்றோர் ஏன் இதைக் கண்டிக்கவில்லை என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.