போதை ஊசி செலுத்திய இளம்பெண் பலி.. காதலன் உட்பட இருவர் கைது.. திருச்சியில் பயங்கரம்!!
இந்த வழக்கின் விசாரணையில் மற்றுமொரு அதிர்ச்சிகரமான கோணமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புகாரளித்த யாஸ்மினின் தாயார் ஷகிலா பேகம் மற்றும் அவரது மகன் ஜாகீர் உசேன் ஆகியோர் ஏற்கனவே போதை மாத்திரைகள் விற்பனை செய்த வழக்கில் அரியமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்திருப்பவர்கள் ஆவர்.
திருச்சி, ஜுன் 10: திருச்சியில் தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்த 18 வயது இளம்பெண், அதிகளவிலான போதை ஊசி செலுத்தப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவரது காதலன் மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையே, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கும் போதை மாத்திரை விற்பனை கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த பரபரப்பு தகவல்களும் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: சிவகங்கையில் மாணவன் கொலை வழக்கில் திருப்பம் – போக்சோ வழக்காக மாற்றம் – அதிர்ச்சி தகவல்
விடுதியில் நேர்ந்த கொடூரம்:
திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சதாம் உசேன் (19). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த யாஸ்மின் (18) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும், சதாம் உசேனின் நண்பரான ஷேக் அப்துல்லா (19) என்பவருடன் இணைந்து திருச்சி ஜங்ஷன் ரவுண்டானா அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, யாஸ்மினுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி, சதாம் உசேனும் ஷேக் அப்துல்லாவும் அவரை ஆட்டோ மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு யாஸ்மினைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
விசாரணையில் வெளிவந்த உண்மை:
தகவலறிந்து வந்த காவல்துறையினர் யாஸ்மினின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடற்கூறாய்வு மற்றும் முதற்கட்ட விசாரணையில், யாஸ்மினுக்கு ‘டெபாடால்’ என்ற போதை மருந்து அதிக அளவில் ஊசி மூலம் செலுத்தப்பட்டதே அவரது மரணத்திற்குக் காரணம் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவர்கள் தங்கியிருந்த அறையைச் சோதனை செய்த போலீசார், அங்கிருந்து 7 போதை மாத்திரை அட்டைகள், நீரில் கலக்கப்பட்ட நிலையில் 2 டீ கப் போதை மருந்து. போதை ஊசி செலுத்தப் பயன்படுத்திய உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, காதலன் சதாம் உசேன் மற்றும் நண்பன் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரையும் பிடித்து தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
காதலன் மற்றும் நண்பன் சிறையிலடைப்பு:
இதற்கிடையே, யாஸ்மினை கடத்திச் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது தாயார் ஷகிலா பேகம் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சதாம் உசேன் மற்றும் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரையும் நேற்று காலை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவரையும் நீதிமன்றக் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். யாஸ்மினின் மரணம் குறித்து தற்போது சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான இறுதிப் பின்னணி தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பின்னணியில் போதை மாத்திரை நெட்வொர்க்?
இந்த வழக்கின் விசாரணையில் மற்றுமொரு அதிர்ச்சிகரமான கோணமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புகாரளித்த யாஸ்மினின் தாயார் ஷகிலா பேகம் மற்றும் அவரது மகன் ஜாகீர் உசேன் ஆகியோர் ஏற்கனவே போதை மாத்திரைகள் விற்பனை செய்த வழக்கில் அரியமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்திருப்பவர்கள் ஆவர்.
மேலும் படிக்க: மீண்டும் ஒரு லாக்அப் டெத்? போலீஸ் விசாரணைக்கு சென்ற ஓட்டுநர் உயிரிழப்பு.. எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் நடந்தது என்ன!
மேலும், உயிரிழந்த யாஸ்மினும் ஆன்லைன் மூலமாகப் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த குடும்பத்தினருக்குப் போதை மாத்திரைகளை மொத்தமாக சப்ளை செய்தது யார்? இதன் பின்னணியில் உள்ள பெரிய நெட்வொர்க் எது? மற்றும் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களுக்கும் இந்த கும்பலுக்கும் என்ன தொடர்பு? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.