3வது மொழி கட்டாயமா? சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை கண்டனம்
3வது மொழி கட்டாயம் என சிபிஎஸ்இ அறிவித்திருக்கும் நிலையில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில், சிபிஎஸ்இயின் இந்த அறிவிப்பு பல பெற்றோர்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, ஒரு அதிர்ச்சியாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை, மே 26 : 3வது மொழி கட்டாயம் என சிபிஎஸ்இ அறிவித்திருக்கும் நிலையில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு கல்வியாண்டு முதலே 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3வது மொழி கட்டாயம் என்ற அறிவிப்பை சிபிஎஸ்இ உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார். மேலும், 20230 ஆம் ஆண்டு என்ற வரம்பை மாற்றி குறுகிய காலத்தில் புதிய மொழியை கற்க வேண்டும் என எதிர்பார்ப்பது மாணவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில், ஏப்ரல் 2026ல் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மொழிகள் கட்டாயமாக்கப்படும் என்றும், அம்மூன்று மொழிகளில் 2 மொழிகள் இந்தியாவைச் சார்ந்த மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்திருக்கிறது. பல மொழிகளைச் சிறு வயதிலிருந்தே கற்கும் வாய்ப்பை குழந்தைகளுக்கு வழங்கும் இந்த முடிவை வரவேற்ற பலரில் நானும் ஒருவன். இது, இந்தியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த இலக்கிய அறிவு பற்றிய குழந்தைகளின் புரிதலை ஏற்படுத்த உதவும்.




இதையும் படிக்க : விவசாய கடன் தள்ளுபடி.. தில்லுமுல்லு வேலை; திசைத்திருப்பவே இந்த அறிவிப்பு – எடப்பாடி பழனிசாமி சாடல்..
சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை கண்டனம்
In April 2026, when the CBSE announced that three languages for Class VI students shall be made compulsory and 2 of the three languages shall be native to India, I was one amongst many who welcomed this decision that allows Children to learn multiple languages from a young age,… https://t.co/fBiDPjZhxg pic.twitter.com/LICAtI6Ydl
— K.Annamalai (@annamalai_k) May 26, 2026
ஏப்ரல் 2026-இல் வெளியிடப்பட்ட அதே அறிவிக்கையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 3வது மொழிப் பாடம், மூன்று ஆண்டுகள் கழித்து வரும் 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே கட்டாயமாக்கப்படும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், 2026 மே 15 அன்று, CBSE தனது இணைப்புப் பள்ளிகள் அனைத்திற்கும் ஓர் அறிவிக்கையை அனுப்பியது. அதில், 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மூன்றாவது கட்டாய மொழியை இந்த கல்வியாண்டிலிருந்தே அறிமுகப்படுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தது. இதன் மூலம், 2029-30 கல்வியாண்டிலிருந்துதான் இது கட்டாயமாக்கப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பில் இருந்து சிபிஎஸ்இ பின் வாங்கியுள்ளது.
இதையும் படிக்க : ‘நியாயப்படுத்த முடியாது.. குதிரபேர அரசியல் செய்யும் தவெக’.. காங்கிரஸ் கட்சி ஜோதிமணி கண்டனம்
இது பல பெற்றோர்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, ஒரு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஏனெனில், அவர்களின் குழந்தைகள் ஏற்கனவே 6 ஆம் வகுப்பிலேயே தங்களுக்கு விருப்பமான ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்துவிட்டனர். ஆனால் தற்போது திருத்தப்பட்ட அறிவிப்பில், 2026 ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில், 9 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 மொழிகளைக் கற்க வேண்டும் என்றும், அவற்றில் 2 மொழிகள் இந்தியாவைச் சார்ந்தவையாக இருக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துகிறது. 9 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் குறுகிய காலத்திற்குள் ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்குக் கூடுதல் மன அழுத்தத்தையே ஏற்படுத்தும் என்பதோடு, அவர்களின் ஒட்டுமொத்த கற்றல் விளைவுகளையும் பாதிக்கும்.
எனவே, இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெறுமாறும், 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகள் கற்பிக்கும் முறையை 2029-30 கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்துவோம் என்ற தனது முந்தைய உறுதிமொழியில் உறுதியாக இருக்குமாறும் கல்வி அமைச்சகத்தை கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.