43 டிகிரி செல்சியஸை நெருங்கும் வெயில்.. வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை..
Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 26, 2026: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் வேலூரில் அதிகபட்சமாக 42.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருத்தணியில் 41.4 டிகிரி செல்சியஸ், தஞ்சையில் 38 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 38.2 டிகிரி செல்சியஸ் மற்றும் மதுரையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சுட்டெரிக்கும் சூரியன் – அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை:
சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 41.3 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், வேலூரில் இயல்பை விட 3.2 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வரக்கூடிய நாட்களில் வெப்பநிலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில இடங்களில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் நிலவும் சூழலில், கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
இது ஒரு பக்கம் இருக்க, தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழையும் பதிவாகி வருகிறது. அந்த வகையில், மே 26ஆம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் குமரி மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடு தொட்டியில் ஆடுகள் விற்பனை அமோகம்.. வெள்ளாடுகள் ரூ. 30,000 வரை விற்பனை..
அதேபோல், மே 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை வருகிற 31ஆம் தேதி வரை நீடிக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெப்பம் சார்ந்த அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.