திமுகவை முதுகில் குத்திய மதிமுக பொதுச்செயலர் வைகோ… டிடிவி தினகரனம் கண்டனம்!
AMMK General Secretary TTV Dhinakaran: திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இணைந்தது திமுக முதுகில் வைகோ கத்தியால் குத்திவிட்டதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.
சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ எனக்கு பிடித்த அரசியல் தலைவர்களுள் ஒருவர் ஆவார். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக நிர்பந்தத்தில் இருந்ததாகவும், அவர்களை நிர்பந்தப்படுத்தி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொன்னதாகவும் அவர் கூறிய கருத்து அவரது தரத்தை அவரே குறைத்து கொள்வதாக உள்ளது. ஒரு வேளை திராவிட முன்னேற்றக் கழக தலைமை நிர்பந்தம் செய்திருந்தால் அப்போதே அவர்களது கூட்டணியில் இருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறி இருக்கலாம். அத்துடன், தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு இருக்கலாம். தேர்தலில் போட்டியிடாமலும் வைகோ இருந்திருக்கிறார். அவர் தற்போது கூறுவது முதுகில் குத்துவது தான்.
திமுக கூட்டணியில் இருந்து தவெகவை விமர்சித்த வைகோ
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவில் இருந்த போது, முதல் அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவர் என்னென்ன கருத்தை எல்லாம் பேசினார். ஆனால், தற்போது தேர்தல் முடிவடைந்த பிறகும், தமிழக வெற்றிக் கழகத்தினர் தன்னை அணுக மாட்டார்கள் என்று வைகோ கூறி இருந்தார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் எம்எல்ஏக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் அவர்களும் திமுக உறுப்பினர்கள் தான். எனவே, திமுக கொறடா சொல்வதை தான் அவர்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்ற முடியும்.
மேலும் படிக்க: அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா தொகுதிகளில் தேர்தலுக்கு தடை… தேர்தல் ஆணையத்தில் இன்பதுரை புகார் மனு!




முதல்வர் விஜய் மேற்கொண்டது குதிரை பேரம் தான்
எனவே, அதிமுக எம்எல்ஏக்கள் இருவரையும் முதல்வர் விஜய் ராஜினாமா செய்யுமாறு சொன்னதாகவும், அவர்களுக்கு தானே பிரச்சாரம் செய்வதாக கூறுவதும் உறுதியாக குதிரை பேரம் தான் என்பதை எடுத்துக்காட்டுகிறது. எனவே, இதனை யாரும் மறுக்க முடியாது என்று தெரிவித்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்து மதிமுக தேர்தலை சந்தித்து இருந்தது. இதில், மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் சீர்காழி மற்றும் கடையநல்லூர் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
9 ஆண்டு கால கூட்டணியை முறித்த மதிமுக
இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேற இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவுடனான 9 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொண்டு தவெக கூட்டணியில் மதிமுக இணைந்தது. அத்துடன் தனது கட்சி எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யுமாறு வைகோ கூறிய நிலையில், அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுகவின் நிலைப்பாட்டை நிராகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜய்யின் அரசியல் ஆரோக்கியமானதல்ல.. சிபிஎம் சண்முகம் குற்றச்சாட்டு!