இபிஎஸ்-க்கு அடுத்த இடி.. MLA பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்..
சில நாட்களுக்கு முன்புதான் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். அவர் தவெகவில் இணைவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சி.விஜயபாஸ்கர் தவெக-வில் இணைகிற அதே மேடையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் அக்கட்சியின் தலைவர் முன்னிலையில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, ஜுன் 29: அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அரசியல் திருப்பங்களின் தொடர்ச்சியாக, கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுகவிலிருந்து ஏற்கனவே 5 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது 6-வது நபராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்த முடிவை எடுத்துள்ளது எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி, இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், சபாநாயகர் அறையில் அவரை நேரில் சந்தித்துத் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். தனது கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கிவிட்டு, அவர் உடனடியாகத் தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிக்க: அரசு வேலை மோசடி புகார்.. முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது எஃப்.ஐ.ஆர்.. சம்மன் அனுப்பிய போலீசார்!!
தொடரும் அதிருப்தி – பின்னணி என்ன?
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கும் இடையே முன்னதாகக் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது கட்சியின் பொதுச்செயலாளர் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்தில் வாக்களித்ததாக, சபாநாயகர் இவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் இறுதி நாளில் அதிருப்தியாளர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்திருந்தனர். இதனால் நடவடிக்கை கைவிடப்பட்டது.
இருப்பினும், இவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட முக்கிய கட்சிப் பதவிகள் மீண்டும் வழங்கப்படும் என்று இபிஎஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த வாரம் எஸ்.பி வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்திப்புக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட கட்சிப் பதவிகள் அனைத்தும் பெயரளவில் மட்டுமே இருந்ததாகவும், அவற்றுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் கருதுகின்றனர். இந்த அதிகாரமற்ற பெயரளவு பதவிகளால் ஏற்பட்ட அதிருப்தியே இந்த அடுத்தடுத்த ராஜினாமாக்களுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
தவெகவில் இணைகிறாரா எம்.ஆர்.விஜயபாஸ்கர்?
சில நாட்களுக்கு முன்புதான் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். அவர் தவெகவில் இணைவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சி.விஜயபாஸ்கர் தவெக-வில் இணைகிற அதே மேடையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் அக்கட்சியின் தலைவர் முன்னிலையில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தவெக இணைப்பு விழா வரும் ஜூலை 2 அல்லது ஜூலை 5-ஆம் தேதி ஓஎம்ஆரில் உள்ள ஒரு தனியார் விடுதியில், சுமார் 10,000 நபர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடத்த சி.விஜயபாஸ்கர் திட்டமிட்டுள்ளார். அதிமுகவில் செல்வாக்குமிக்க தலைவர்களைத் தன்னோடு தவெக-வில் இணைக்க அவர் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இந்த ராஜினாமா அமைந்துள்ளது.
இதையும் படிக்க : மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமாருக்கு சபரீசன் நோட்டீஸ்
அதிமுகவுக்கு அடுத்தடுத்த சவால்கள்:
2016-2021 காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட அதிமுகவின் முக்கிய முகமாகப் பார்க்கப்பட்டவர். அவரது இந்த விலகல் கரூர் மாவட்ட அதிமுகவுக்குப் பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அடுத்த சில நாட்களில் இன்னும் சில அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.