சட்டத்தை கையில் வைத்து, சூழ்ச்சி செய்து… திமுக அரசை கடுமையாக விமர்சித்த விஜய்
Vijay Targets DMK : புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் புதுச்சேரி அரசுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, டிசம்பர் 9: புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் புதுச்சேரி அரசுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் பதிவில், அதிகாரத்தை வைத்துக்கொண்டு, சட்டத்தை வளைத்து, சூழ்ச்சிகள் உட்பட என்னென்னவோ திட்டம் போட்டு நம் அரசியல் பயணத்தை, மக்கள் சந்திப்பை, பிரசார முன்னெடுப்புகளை இந்தக் கபட நாடகத் திமுக.\ அரசு தடுக்கப் பார்த்தாலும், முடக்க முயன்றாலும், அது அணுவளவும் நடக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி பொதுக்கூட்டம் குறித்து பதிவிட்ட விஜய்
தவெக தலைவர் விஜய் டிசம்பர் 9, 2025 அன்று புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக தவெகவின் பொதுக்கூட்டத்துக்கு 5000 பேர் தான் பங்கேற்க வேண்டும், கியூஆர் கோடுடன் கூடிய பாஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாஸ் அளிக்கப்பட்ட நிறைய பேர் பொதுக்கூட்டத்திற்கு வராத காரணத்தால், விழா அரங்கிற்கு வெளியே காத்திருந்த தொண்டர்களை அனுமதிக்க வேண்டும் என புஸ்ஸி ஆனந்த கேட்க, அதற்கு டிஜிபி ஷாலினி சிங் மறுப்பு தெரிவித்தார்.




விஜய்யின் எக்ஸ் பதிவு
என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மாநில மக்களுக்கு என் அன்பான வணக்கம்.
எல்லைகள் கடந்து, மொழியாலும் மனத்தாலும் எப்போதும் இணைந்திருக்கும் நாம், ஒரு புதிய அரசியல் வரலாற்றுக்கான அத்தியாயத்தை இன்று புதுச்சேரி மண்ணில் தொடங்கியிருக்கிறோம்.
நிலப் பரப்பிலும், நிர்வாகக்…
— TVK Vijay (@TVKVijayHQ) December 9, 2025
இந்த நிலையில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிறகு தற்போது விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் சிறப்பான பாதுகாப்பு வழங்கிய புதுச்சேரி அரசுக்கும் காவல்துறைக்கும் நன்றி தெரிவித்த அவர், திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அவரது பதிவில், நிலப் பரப்பிலும், நிர்வாகக் கட்டமைப்பிலும் புதுச்சேரி சிறிய யூனியன் பிரதேசம் என்றாலும், கட்சி பேதமின்றி, வெறுப்புணர்வின்றி எதிர்க்கட்சியான நம் நிகழ்வுக்கு மிகப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்து நம் பாதுகாப்பிலும் பொதுமக்கள் பாதுகாப்பிலும் ஜனநாயக அரசியல் மாண்போடு புதுச்சேரி அரசு நடந்துகொண்டிருக்கிறது.
அந்த வகையில், புதுச்சேரி அரசுக்கும் முதல்வர் அவர்களுக்கும் உள்துறை அமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் புதுச்சேரி மாநிலக் காவல் துறைக்கும் நமது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். எழுச்சி மிக்க நம் இளைஞர் படையினரும் கட்டுக்கோப்பும் பொறுப்பும் மிக்கவர்கள் என்பதை அவதூறாளர்களுக்குப் புரிய வைத்துள்ளார்கள்.
‘திமுக அரசின் முயற்சி நடக்காது’
அதிகாரத்தை வைத்துக்கொண்டு, சட்டத்தை வளைத்து, சூழ்ச்சிகள் உட்பட என்னென்னவோ திட்டம் போட்டு நம் அரசியல் பயணத்தை, மக்கள் சந்திப்பை, பிரசார முன்னெடுப்புகளை இந்தக் கபட நாடகத் தி.மு.க. அரசு தடுக்கப் பார்த்தாலும், முடக்க முயன்றாலும், அது அணுவளவும் நடக்காது. கழகத்தின் எதிர்பார்ப்பை, வேண்டுகோள்களை, உத்தரவுகளை மனதார மதித்து, நிகழ்வை வெகு வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த, அதற்குக் காரணமாயிருந்த தமிழகம், புதுச்சேரி மக்களுக்கும் கழகத் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றி!