AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் – எடப்பாடி பழனிசாமி

போராட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், இந்த காலகட்டத்தில் தமிழக மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். போதைப்பொருள், கஞ்சா மற்றும் கள்ளச்சாராய விற்பனை கிராமம் முதல் நகரம் வரை அதிகரித்துள்ளதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி அருகே போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் – எடப்பாடி பழனிசாமி
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Mar 2026 15:42 PM IST

சென்னை, மார்ச் 17, 2026: சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாகக் கூறி, திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

மேலும் படிக்க: உங்க கனவை சொல்லுங்கள்.. எனக்கு நயன்தாரா வேண்டும் – நிறைவேற்றுவாரா முதல்வர் – சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு..

போதைப்பொருள் கஞ்சா விற்பனை பல மடங்கு அதிகரிப்பு:

போராட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், இந்த காலகட்டத்தில் தமிழக மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். போதைப்பொருள், கஞ்சா மற்றும் கள்ளச்சாராய விற்பனை கிராமம் முதல் நகரம் வரை அதிகரித்துள்ளதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி அருகே போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமாகி வருவதாகவும், பல இடங்களில் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் படிக்க: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு; அடுத்த 7 நாட்களில் வெப்பம் குறையும்

அதிமுக ஆட்சிக்கு வந்தால் வழக்குகள் விசாரிக்கப்படும்:

அதேபோல், சென்னை அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வழக்கில் திமுக அமைச்சர் தொடர்புடையதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும், அந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்ய முயற்சி நடப்பதாகவும் அவர் கூறினார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த வழக்குகள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களை மீண்டும் விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என அவர் தெரிவித்தார்.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு சம்பவம் நடந்ததாகவும், அதில் தொடர்புடையவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வழக்கும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று கூறினார்.

இதற்கு இணையாக, தமிழகத்தில் விலைவாசி உயர்வு, மின்கட்டணம் மற்றும் வீட்டு வரி அதிகரித்திருப்பதால் மக்கள் சிரமப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். திமுக அரசு 525 தேர்தல் வாக்குறுதிகள் அளித்தாலும், அதில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

விரைவில் தொகுதி பங்கீடு நடைபெறும்:

போராட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறினார்.

Follow Us