கோவை பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு மயங்கி விழுந்த 43 மாணவர்கள்.. மருத்துவமனையில் அனுமதி!
Coimbatore Government School Lunch Issue | கோயம்புத்தூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவ, மாணவிகள் நேற்று (மார்ச் 10, 2026) மயங்கி விழுந்த நிலையில், அவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூர், மார்ச் 11 : கோயம்புத்தூரில் (Coimbatore) உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், 40 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பள்ளியில் மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள் மயங்கி விழுந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று (மார்ச் 10, 2026) மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் சிலர் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட சிக்கல்களை எதிர்க்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க : தகிக்க விடும் வெயில்… குளிர்ச்சியான பீரை நாடும் மது பிரியர்கள்… எகிறும் விற்பனை!
சாப்பாட்டில் இறந்து கிடந்த பல்லி
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சுகாரத்துறை அதிகாரிகள் மாணவர்கள் சாப்பிட்ட உணவை ஆய்வு செய்துள்ளனர். அப்போது மாணவர்கள் சாப்பிட்ட உணவில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அதிகாரிகள் உடனடியாக ஆசிரியர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட 30 மாணவர்கள் மற்றும் 13 மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூல்ம கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க : இன்று தொடங்குகிறது 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு.. சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்!
மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள 43 மாணவ – மாணவிகளுக்கு 5 பேர் கொண்ட மருத்துவ குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், உணவில் பல்லி விழுந்ததாக சொல்லப்படும் புகார் குறித்து விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். பணியாளர்களின் கவனக்குறைவு இதற்கு காரணமா என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும். இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றரிக்கை அனுப்பப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.



