இனி விடுதிகளில் காபி, டீ, சப்பாத்தி, தோசை கிடையாது.. தவிப்பில் பேச்சுலர்ஸ்
LPG Shortage: தமிழ்நாடு ஐடி விடுதிகள் மற்றும் பிஜி விடுதிகள் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சப்பாத்தி, தோசை போன்ற உணவுகளும் வழங்கப்படாது என்றும், சாம்பார், குருமா போன்றவற்றிற்கு பதிலாக சட்டினி மட்டும் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை, மார்ச் 10, 2026: வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், விடுதிகளில் இனி காபி, டீ, சப்பாத்தி, தோசை உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் சாம்பார், குருமா ஆகியவற்றிற்கு பதிலாக சட்டினி வழங்கப்படும் என்றும், சைட் டிஷ் பதிலாக வாரத்திற்கு மூன்று நாட்கள் முட்டை வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு தங்கும் விடுதி மற்றும் உணவுடன் கூடிய விடுதிகளின் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு:
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சூழலில், ஈரான் ஹார்மோஸ் நீரிணையை மூடியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இந்த ஹார்மோஸ் நீரிணை வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பாதை மூடப்பட்டுள்ள காரணத்தினால் உலகளவில் கச்சா எண்ணெய் கடுமையான தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது. அதேபோல் ஒரு பேரல் கச்சா எண்ணெய் தற்போது 100 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையில் கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வரும் எல்பிஜி ஏற்றுமதி வாராந்திர அளவில் சுமார் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சிலிண்டர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் கடுமையான தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன.
உணவகங்கள் மூடல்:
இதன் காரணமாக பெங்களூருவில் இன்று முதல் உணவகங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மும்பையிலும் நிலைமை மோசமடைந்து வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் உணவகங்களில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன என கூறப்படுகிறது. இதனால் பல இடங்களில் வெரைட்டி ரைஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. அதேபோல் சைட் டிஷ்களும் வழங்கப்படாமல் உள்ளது.
மேலும் படிக்க: எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..
இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக கேஸ் சிலிண்டர்கள் ஏஜென்சிகளிலும் கையிருப்பு இல்லாததால் வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் சில ஏஜென்சிகள் மூடப்பட்டுள்ளன.
விடுதிகளில் இனி காபி, டீ கிடையாது:
இதற்கிடையில் தமிழ்நாடு தங்கும் விடுதிகள் மற்றும் உணவுடன் கூடிய விடுதிகளின் நலச்சங்கம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பிஜி (PG) விடுதிகளில் இனி தேநீர், காபி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஐடி விடுதிகள் மற்றும் பிஜி விடுதிகள் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சப்பாத்தி, தோசை போன்ற உணவுகளும் வழங்கப்படாது என்றும், சாம்பார், குருமா போன்றவற்றிற்கு பதிலாக சட்டினி மட்டும் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு.. ஆட்டோக்கள் இயங்குவதில் சிக்கல்.. நிலமை என்ன?
மேலும் மீல்ஸ் வழங்கப்படாமல், அதற்குப் பதிலாக கலவை சாதம், புளியோதரை, லெமன் ரைஸ், தக்காளி சாதம் போன்றவை மட்டுமே வழங்கப்படும் என்றும், கூடுதலாக அப்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் பிஜி விடுதிகளில் ஏராளமான மக்கள் வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து உள்ளனர்.