வாழப்பாடி அரசு விடுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. 4 பணியாளர்கள் சஸ்பெண்ட்.. இருவர் கைது!
Vazhapadi Hostel Students Harassment : சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி அரசு விடுதியில் தங்கியுள்ள 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் விடுதியில் பணிபுரியும் 4 ஊழியர்கள் கூண்டோடு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பெண் ஊழியர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் அரசு மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவிகள் தங்கி இருந்து அரசு பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். இந்த விடுதியில் அதே பகுதியை சேர்ந்த ராதிகா ( 45 வயது) என்பவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது நண்பரான ரகுபதி ( 30 வயது) என்பவர் அவ்வப்போது விடுதிக்கு வந்து செல்வது வழக்கமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு ராதிகாவின் நண்பர் ரகுபதி விடுதிக்கு வந்த நிலையில், அங்கு தங்கி இருந்த 2 மாணவிகளை வெளியே அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அவரிடம் இருந்து தப்பி விடுதிக்கு சென்றுள்ளனர்.
வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார்
பின்னர், இந்த பாலியல் தொல்லை சம்பவம் தொடர்பாக தங்களது பெற்றோருக்கு மாணவிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு இரு மாணவிகளின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் படிக்க: தென்காசியில் டெங்கு பரவல்.. அடுத்தடுத்து பலியான இரு பெண்கள்.. பெரும் பீதியில் பொதுமக்கள்!




விடுதி ஊழியர்கள் 4 பேர் அதிரடி சஸ்பெண்ட்
இதில், விடுதியின் தூய்மை பணியாளர் ராதிகா மற்றும் அவரது நண்பர் ரகுபதி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சேலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சின்னசாமி விசாரணை மேற்கொண்டார். இதில், மாணவிகள் விடுதியின் காப்பாளர் விஜயலட்சுமி, சமையலர் கலைச்செல்வி, இரவு நேர காவலர் சுமதி மற்றும் தூய்மை பணியாளர் ராதிகா ஆகிய 4 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
வாழப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பு
தற்போது, வாழப்பாடி விடுதியில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் அனைவரும் கூண்டோடு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதன் காரணமாக, அருகில் உள்ள அரசு விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்கள் வாழப்பாடி விடுதியில் தற்காலிகமாக பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு விடுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தென்காசியில் ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற வனச்சரகர்.. கையும் களவுமாக தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!