IPL 2025: ஹர்திக் பாண்ட்யா – சுப்மன் கில் இடையே ஈகோ மோதலா? – வைரல் வீடியோ!
ஐபிஎல் 2025 எலிமினேட்டர் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மும்பை வெற்றி பெற்றது. ஆனால், டாஸ் நேரத்தில் சுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்ட்யா இடையே ஏற்பட்ட கைக்குலுக்கல் இல்லாத சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் மற்றும் மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இடையே ஈகோ மோதல் இருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரானது கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 2025, மே 25 ஆம் தேதியுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்ததால் நடுவே 10 நாட்கள் போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் அட்டவணை திருத்தப்பட்டு மீதமுள்ள போட்டிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் லீக் போட்டிகள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தகுதிப் பெற்றது. இதனைத் தொடர்ந்து முதலில் நடந்த தகுதிச் சுற்று முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணி பஞ்சாபை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
குஜராத் – மும்பை அணிகள் மோதல்
இதனிடையே வெளியேற்றுதல் சுற்றில் குஜராத், மும்பை அணிகள் 2025, மே 30 ஆம் தேதி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்று மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் குவித்தது. தொடர்ந்து பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் பஞ்சாப் அணியுடன் 2025, ஜூன் 1 ஆம் தேதி விளையாட உள்ளது.




ஈகோ மோதலா?
🚨 Toss 🚨@mipaltan won the toss and elected to bat first against @gujarat_titans
Updates ▶️ https://t.co/R4RTzjQfph #TATAIPL | #GTvMI | #Eliminator | #TheLastMile pic.twitter.com/E3G3NU0FXK
— IndianPremierLeague (@IPL) May 30, 2025
இப்படியான நிலையில் குஜராத், மும்பை அணிக்கான ஆட்டத்தில் டாஸ் போடப்பட்டது. அப்போது ஹர்திக் பாண்ட்யா ஹெட் கேட்ட நிலையில் அவருக்கு சாதகமாக டாஸ் விழுந்தது. இதனால் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் அதிருப்தி அடைந்ததாக சொல்லப்பட்டது. வழக்கமாக டாஸ் வெல்பவர், எதிரணியின் கேப்டனுடன் கைக்குலுக்கலில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் டாஸ் போடப்பட்டதும் ஹர்திக் பாண்ட்யா கைக்குலுக்க எதிர்பார்த்த நிலையில் சுப்மன் கில் அப்படி எதுவும் இல்லை என்கிற பாணியில் நடந்து கொண்டார். இதனால் இருவருக்குள்ளும் ஈகோ மோதல் வெடித்துள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இளம் வீரரான சுப்மன் கில் ஜூன் மாதம் இங்கிலாந்து அணியுடன் மோதப்போகும் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.