IPL 2025 Eliminator: போர் கண்ட சிங்கமாய் மும்பை.. குஜராத் வீழ்த்தி அசத்தல்! குவாலிபையர் 2க்குள் நுழைந்த ஹர்திக் படை!
Mumbai Indians: ஐபிஎல் 2025 எலிமினேட்டர் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குவாலிபையர் 2-க்குள் நுழைந்தது. மும்பை அணி 228 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 81 ரன்களும், பேரிஸ்டோவ் 47 ரன்களும் எடுத்தனர். குஜராத் அணியில் சாய் சுதர்சன் 80 ரன்கள் எடுத்தார். ஆனால் இறுதி ஓவரில் மும்பை அணியின் அற்புத பந்துவீச்சால் குஜராத் தோல்வியடைந்தது.

ஐபிஎல் 2025ன் (IPL 2025) எலிமினேட்டர் சுற்றில் இன்று அதாவது 2025 மே 30ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் (Gujarat Titans) அணியும் முல்லன்பூர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று குவாலிபையர் 2க்கு தகுதிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்களும், பேரிஸ்டோவ் 22 பந்துகளில் 47 ரன்களும் எடுத்திருந்தனர். குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
229 ரன்கள் இலக்கு:
229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சுப்மன் கில் 2 பந்துகளை சந்தித்து 1 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்ததாக உள்ளே வந்த குசால் மெண்டிஸூம் 10 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சாய் சுதர்சனுடன், வாஷிங்டன் சுந்தர் இணைந்து மும்பை இந்தியன்ஸ் பவுலர்களுக்கு தண்ணீர் காட்ட தொடங்கினர்.




ஒரு முனையில் சாய் சுதர்சன் பவுண்டரிகளாக வெளுக்க, வாஷிங்டன் சுந்தர் மறுமுனையில் பவுண்டரி, சிக்ஸருமாக பறக்கவிட்டார். இந்த ஜோடி சிறப்பாக பேட்டிங் செய்து, 84 பார்ட்னர்ஷிப் அமைத்தது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் வெறும் 24 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 48 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்து அசத்திகொண்டிருந்தார் சாய் சுதர்சன்.
கிடைத்த பந்துகளை எல்லாம் சாய் சுதர்சன் பவுண்டரியாக விரட்ட, உள்ளே வந்த ரூதர்ஃபோர்ட்டும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விரட்டி கொண்டிருந்தார். போட்டியை முடிப்பார் என்று ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த சாய் சுதர்சன் 49 பந்துகளில் ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த 2 ஓவர்கள் நிற்க குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி 18 பந்துகளில் 45 ரன்கள் தேவையாக இருந்தது.
குவாலிபையர் 2:
Q2 ✅
— Mumbai Indians (@mipaltan) May 30, 2025
17வது ஓவரை வீசிய பும்ரா பந்தில் திவாட்டியா மற்றும் ரூதர்போர்டு இணைந்து 9 ரன்களை எடுத்தனர். இதனால் கடைசி 2 ஓவர்களில் 36 ரன்கள் தேவையாக இருந்தது. போல்ட் வீசிய 19 வது ஓவரின் முதல் பந்திலேயே ரூதர்போர்டு, திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்ததாக உள்ளே வந்த ஷாருக் கான் 4 பந்துகளில் 11 ரன்களை எடுத்தார். இதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கடைசி 6 பந்துகளில் 24 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி ஓவர் வீசிய ரிச்சர்ட் க்ளீசன் பந்தின் முதல் பந்தை திவாட்டியா 1 ரன்னை தட்ட, ஸ்ட்ரைக் வந்த ஷாரூக் கான் அடுத்த 2 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். தொடர்ந்து தசை பிடிப்பு காரணமாக க்ளீசனுக்கு பதிலாக அடுத்த 3 பந்துகளை அஷ்வினி குமார் வீச வேண்டிய சூழல் உருவானது. 19.4வது பந்தில் ஷாரூக் கான் ஆட்டமிழக்க, அடுத்த 2 பந்துகளில் அஷ்வினி குமார் டாட் பந்துகளாக வீசினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், குவாலிபையர் 2க்குள் அடியெடுத்து வைத்தது.