India vs England Test Series: இந்திய டெஸ்ட் அணியில் இடம்! சாய் சுதர்சனுக்கு பேட்டிங் நுட்பம் இல்லையா? முன்னாள் தமிழ்நாடு பயிற்சியாளர் குற்றச்சாட்டு!
Sai Sudharsan's England Test Debut: சாய் சுதர்சன் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு தேர்வான நிலையில், முன்னாள் தமிழ்நாடு பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி அவரது பேட்டிங் நுட்பம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். டியூக்ஸ் பந்தில் சிறப்பாக செயல்பட அவருக்கு நுட்ப மாற்றம் தேவை என அவர் கூறியுள்ளார். இதற்கு சாய் சுதர்சன், தேசிய அணிக்காக விளையாடுவது பெருமை என பதிலளித்துள்ளார். அவரது இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அனுபவமும், இந்தியா ஏ அணியில் அவர் ஏற்கனவே இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசன் முடிந்ததும் இந்திய வீரர்கள் இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. இதில், இளம் வீரர் சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த 18 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சனும் (Sai Sudharsan) இடம்பிடித்துள்ளார். இந்தநிலையில், இங்கிலாந்தில் டியூக்ஸ் பந்தில் விளையாடும் அளவிற்கு சாய் சுதர்சனுக்கு பேட்டிங் நுட்பங்கள் இல்லை என முன்னாள் தமிழ்நாடு பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி (Sulakshan Kulkarni) தெரிவித்திருப்பது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
என்ன சொன்னார் சுலக்ஷன் குல்கர்னி..?
2023-24 சீசனில் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த சுலக்ஷன் குல்கர்னி, சாய் சுதர்சனின் பேட்டிங் நுட்பம் குறித்து பேசினார். அதில், “சாய் சுதர்சனின் உள்நாட்டு போட்டிகளில் சாதனை சிறப்பாக இல்லை. நான் பயிற்சியாளராக இருந்தபோது, வேகத்திற்கு சாதகமான பிட்ச்களில் சாய் சுதர்சன் விளையாடிய 2 போட்டிகளில் கவனித்துள்ளேன். அங்கு அவர் சிறப்பாக செயல்படவில்லை. பந்து வேகத்தால் ஸ்விங் ஆகும்போது, அதை எதிர்கொள்ளும் அளவிற்கு சாய் சுதர்சன் பேட்டிங் நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்.




பேட்டிங் நுட்பம்:
A brilliant moment for Sai Sudharsan! 🫶💯
🤎 | #SurreyCricket https://t.co/rin3LLBhRR pic.twitter.com/76IvDxViih
— Surrey Cricket (@surreycricket) August 30, 2024
சாய் சுதர்சன் எப்போதும் பந்திலிருந்து உடலை விலக்கி அடிக்கும் போக்கை கொண்டுள்ளார். அதேநேரத்தில், இங்கிலாந்தில் வெற்றியின் ரகசியம் தாமதமாக விளையாடி, பந்தை உங்கள் மூக்கின் கீழ் வரவைத்து ஆட வேண்டும். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு செல்வதற்கு முன்பு, அவரது பேட்டிங் நுட்பத்தை மாற்ற வேண்டும்” என்றார்.
சாய் சுதர்சன்:
2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் சாய் சுதர்சன் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக 2 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன் ஒரு போட்டியில் சுதர்சன் 6வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்து தனது முதல், முதல் தர சதத்தை பதிவு செய்தார். இதுவரை 23 வயதான சாய் சுதர்சன் 29 முதல் தர போட்டிகளில் விளையாடி 1957 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐபிஎல் 2025 சீசனுக்கு பிறகு, சாய் சுதர்சன் இந்தியா கேப்டன் சுப்மன் கில்லுடன் இணைந்து வருகின்ற 2025 ஜூன் 6ம் தேதி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணிக்கான போட்டியில் விளையாடவுள்ளனர். இதனை தொடர்ந்து, 2 வாரங்களுக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் களமிறங்குவார்.
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றது குறித்து பேசிய சாய் சுதர்சன், “ஒரு கிரிக்கெட் வீரர் தனது நாட்டுக்காக விளையாடுவது ஒரு பெரிய மரியாதை என்று நான் உணர்கிறேன். இது ஒரு அற்புதமான, சிறப்பு வாய்ந்த மற்றும் நம்பமுடியாத உணர்வு. கிரிக்கெட் விளையாடத் தொடங்கும் எந்தவொரு வீரரும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறார், அதுவே அவரது இறுதி லட்சியம்.” என்று தெரிவித்தார்.