MIvPBKS : சூர்யகுமார் யாதவ் உலக சாதனை – சச்சினின் சாதனையும் முறியடிப்பு
MIvPBKS : ஜபிஎல் 2025ல் பஞ்சாப் கிங்க்ஸ்க்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் 14 லீக் போட்டிகளில் தொடர்ந்து 25 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். மேலும் இந்த போட்டியில் மும்பையின் லெஜெண்ட் சச்சினின் சாதனையையும் முறியடித்தார்.

மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav), ஐபிஎல்லின் மற்றொரு சீசனிலும் தனது ரன் மழையைத் தொடர்ந்துள்ளார். இந்த ஐபிஎல் (IPL) தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்தில் தொடர் தோல்விகளை சந்தித்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. பின்னர் மெல்ல அந்த அணி வெற்றிப்பாதைக்கு திரும்பியது. தற்போது அந்த அணி 14 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் மும்பை அணியின் இந்த வெற்றிக்கு சூர்யகுமார் யாதவின் வலுவான பேட்டிங் முக்கிய காரணம். இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் உலக சாதனையைப் படைத்திருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக முறை ஒரு இன்னிங்ஸில் 25 ரன்களுக்கு மேல் எடுத்து சாசனை படைத்திருக்கிறார். இது மட்டுமல்லாமல், சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் அவர் முறியடித்திருக்கிறார்.
ஐபிஎல் 2025 போட்டியில் மே 26, 2025 அன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற 69வது லீக் ஆட்டத்தில் மும்பை மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதின. இந்த சீசனில் இரு அணிகளுக்கும் இதுவே கடைசி லீக் போட்டியாகும். இரண்டு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் தங்கள் இடத்தை தக்கவைக்க கடுமையாக போராடின. கடந்த போட்டியில் அபாரமான அரைசதம் அடித்து மும்பை அணியை பிளேஆஃப் வரை அழைத்துச் சென்ற சூர்யகுமார் யாதவ், இந்த முறையும் சிறப்பாக விளையாடி அணியை வலுவான ஸ்கோரை நிர்ணயிக்க காரணமாக அமைந்தார்.
சூர்யகுமார் யாதவ் உலக சாதனை
ஆறாவது ஓவரில் களமிறங்கிய மும்பை அணியின் துணை கேப்டன் சூர்யா களமிறங்கி, பவுண்டரிகளாக அடித்து ரன் வேட்டையில் இறங்கினார். அப்போது அவர்22 ரன்கள் அடித்திருந்தபோது 9வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். இதனையடுத்து அவரது ஸ்கோர் 26 ரன்களாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 14வது இன்னிங்சில் 25 ரன்களைக் கடந்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார். இதன் மூலம், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் டி20 கேப்டன் டெம்பா பவுமாவின் சாதனையை முறியடித்தார். இது மட்டுமல்லாமல், ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக, லீக் ஆட்டத்தின் ஒவ்வொரு போட்டியிலும் 25 ரன்கள் எடுத்த பேட்ஸ்மென் என்ற பெருமையையும் பெற்றார்.
சச்சினின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்
இது மட்டுமல்லாமல், சூர்யகுமார் யாதவ் இந்தப் போட்டியில் 650 ரன்களைக் கடந்தார். இதனையடுத்து ஐபிஎல் வரலாற்றில் தனது அதிகபட்ச ரன்களைப் பெற்றார். இதில் சிறப்பு என்னவென்றால், முன்னாள் மும்பை கேப்டனும் சிறந்த பேட்ஸ்மேனுமான சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் அவர் முறியடித்தார். கடந்த 2010 சீசனில் சச்சின் 618 ரன்கள் எடுத்திருந்தார். இதுதான் ஒரு மும்பை இந்தியன்ஸ் வீரர் எடுத்த அதிக பட்ச ரன்களாக இருந்தது. தற்போது சூர்யகுமார் யாதவ் அவரை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்தார்.