“₹16,706 கோடி டீல்”.. RCB அணியின் பெயர் மாறுகிறதா?.. ரகசியம் உடைத்த அனன்யா பிர்லா!!
Who Is Ananya Birla: தனது 17 வயதிலேயே 'ஸ்வதந்த்ரா மைக்ரோஃபின்' என்ற நிறுவனத்தைத் தொடங்கி கிராமப்புற பெண்களுக்கு நிதி உதவி அளித்து வரும் அனன்யா, பிர்லா குழுமத்தின் முக்கிய நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவிலும் இடம்பெற்றுள்ளார். தற்போது இவர், விளையாட்டுத் துறையிலும் தனது முத்திரையைப் பதிக்கத் தொடங்கியுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய மாற்றமாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி சுமார் 16,706 கோடி ரூபாய்க்கு (1.78 பில்லியன் டாலர்) விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த அணியை நிர்வகித்து வந்த ‘யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட்’ (USL), தனது 100 சதவீத பங்குகளை ஒரு பெரும் கூட்டமைப்பிற்கு விற்பனை செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பிரம்மாண்ட விற்பனையில் ஆதித்யா பிர்லா குழுமம் (ABG) முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது. இவர்களுடன் இணைந்து பிளாக்ஸ்டோன் (Blackstone), டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் மற்றும் அமெரிக்க முதலீட்டாளர் டேவிட் பிளிட்சரின் ‘போல்ட் வென்ச்சர்ஸ்’ (Bolt Ventures) ஆகிய நிறுவனங்கள் இந்தக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன. இந்த முழுத் தொகையும் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஒரு ஐபிஎல் அணிக்கு இதுவரை 17 கேப்டன்கள்.. 10 அணியும் இதுவரை எத்தனை கேப்டன்களை நியமித்துள்ளது?
ஆர்சிபி அணியின் பெயர் மாறுகிறதா?:
இதைத்தொடர்ந்து, பிர்லா குடும்பம் கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது. அதோடு, அணி புதிய கைக்கு மாறியுள்ளதால், ‘ஆர்சிபி’ என்ற பெயர் மாற்றப்படுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதற்கு ஆதித்யா பிர்லா குழுமத்தின் முக்கிய முகமும், தொழிலதிபருமான அனன்யா பிர்லா விளக்கமளித்துள்ளார். இதுகுறித்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்த அவர், ஆர்சிபி (RCB) எப்போதும் ஆர்சிபி-யாகவே இருக்கும்” அணியின் பெயர் மாற்றப்படாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம், 2025ல் தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி, அதே பெயருடனேயே 2026 சீசனிலும் களம் காணும் என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.
யார் இந்த அனன்யா பிர்லா?:
பிரபல தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லாவின் மகளான அனன்யா பிர்லா, ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோர் மற்றும் சர்வதேச பாப் பாடகி ஆவார். இவரது பாடல்கள் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளன. மேலும், ‘எம்பவர்’ (Mpower) என்ற அமைப்பின் மூலம் மனநல விழிப்புணர்வுக்காகவும் இவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவரது சகோதரர் ஆர்யமன் விக்ரம் பிர்லா ஆர்சிபி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிர்லா குடும்பம் கிரிக்கெட் செய்திகளில் முன்னிலை பெற்றது. அனன்யா பிர்லா தற்போது ஆர்சிபி அணியின் ‘பிரின்சிபல் பார்ட்னராக’ இணைந்துள்ளார்.
சுப்மன் கில் சந்திப்பு வைரல்:
இதற்கிடையில், ஐபிஎல் 2026 விளம்பர நிகழ்வின் போது குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில்லை அனன்யா சந்தித்தார். அப்போது கில் தனது கையெழுத்திட்ட ஜெர்சியை அவருக்கு வழங்கினார். இந்த புகைப்படங்கள் மற்றும் இது தொடர்பான மீம்களை அனன்யா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: ஒரு போட்டியில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள்.. கெத்து காட்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
தொழில் மற்றும் சமூகப் பணி:
தனது 17 வயதிலேயே ‘ஸ்வதந்த்ரா மைக்ரோஃபின்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி கிராமப்புற பெண்களுக்கு நிதி உதவி அளித்து வரும் அனன்யா, பிர்லா குழுமத்தின் முக்கிய நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவிலும் இடம்பெற்றுள்ளார். வணிகம், இசை மற்றும் மனநல விழிப்புணர்வு எனப் பன்முகத் திறமையாளராக விளங்கும் இவர், தற்போது விளையாட்டுத் துறையிலும் தனது முத்திரையைப் பதிக்கத் தொடங்கியுள்ளார்.