தோனிக்கு நீதிமன்றம் நோட்டீஸ் – ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கில் திருப்பம்
Madras HC Issues Notice to Dhoni : ஐபிஎல் சூதாட்ட வழக்கில், சாட்சிகள் விசாரணையை முழுமையாக வீடியோ பதிவு செய்யக் கோரி ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுக்களுக்கு, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 17, 2026 இன்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை, செப்டம்பர் 17 : ஐபிஎல் சூதாட்ட வழக்கில், சாட்சிகள் விசாரணையை முழுமையாக வீடியோ பதிவு செய்யக் கோரி ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுக்களுக்கு, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 17, 2026 இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை வருகிற அக்டோபர் 9, 2026 அன்று நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தோனிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சூதாட்டம் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்த நடைபெற்ற விசாரணையில் விசாரணை அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது ஐபிஎல் சூதாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனியும் சூதாட்டத்தில் தொடர்புடையவர் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க : WPL 2027: மகளிர் ப்ரீமியம் லீக் போட்டிகள் எப்போது தொடங்கும்? வெளியான அறிவிப்பு




இந்த நிலையில் இந்த ருத்து தனது மதிப்பை களங்கப்படுத்துவதாக கூறி சம்பத் குமார் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மீது ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு எம்.எஸ்.தோனி கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சிடி ஆவணங்களை எழுத்துப்பூர்வமாக மாற்ற உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த பிப்ரவரி, 2026ல் விசாரணைக்கு வந்தபோது ஆவணங்களை எழுத்துப்பூர்வமாக மாற்ற ஆகும் உரிய கட்டணத்தை தோனி செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ஆணையர் ஜெயஸ்ரீ முன்னிலையில், தோனியின் சாட்சியத்தைப் பதிவு செய்வதைக் கண்காணிக்க ஒரு நீதித்துறை அதிகாரியை நியமிக்க வேண்டும். மேலும், சாட்சிகள் விசாரணை முழுவதையும் கட்டாயமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க : ஐபிஎல் 2027 ஏலம் எப்போது? இந்தியாவில் இந்த முறை.. நடக்கப்போவது என்ன?
தோனி ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் என்பதற்காக அவரது சாட்சிப் பதிவை நட்சத்திர விடுதியிலோ அல்லது தனியார் இடங்களிலோ நடத்தக் கூடாது என்றும், இந்த விசாரணை நீதிமன்ற வளாகத்தில் அல்லது ஏதேனும் ஒரு அரசு கட்டிடத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு செப்டம்பர் 17, 2026 இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மனுவை ஆய்வு செய்த நீதிபதி, இதுகுறித்து கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 9, 2026 அன்று ஒத்திவைத்தார்.