MIvsPBKS – திலக் வர்மா அதிரடி – பஞ்சாபை வீழ்த்தி மும்பை அபார வெற்றி
IPL 2026 : ஹிமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்க்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை திலக் வர்மாவின் அதிரடியால் அபார வெற்றி பெற்றது.
தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக துவக்கம் கிடைத்தது. 11வது ஓவரின் முடிவில், பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 107 ரன்கள் குவித்து, வலுவான நிலையில் இருந்தது. இத்தருணத்தில், மும்பை அணியின் கேப்டனான ஜஸ்பிரித் பும்ரா, 12வது ஓவரை வீசும் பொறுப்பை ஷர்துல் தாகூரிடம் ஒப்படைத்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே, சதம் அடிக்கும் முனைப்பில் இருந்த ச பிரப்சிம்ரன் சிங்கை ஆட்டமிழக்கச் செய்து, மும்பை அணிக்கு ஒரு முக்கியமான திருப்புமுனையை ஷர்துல் ஏற்படுத்தித் தந்தார்.
ஷர்துல் தாகூரின் மேஜிக்
பிரப்சிம்ரன் ஆட்டமிழந்த பிறகு, பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் களத்திற்கு வந்தார். அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஒரு பவுண்டரி அடித்து, நம்பிக்கையூட்டும் தொடக்கத்தை அளித்தார். இருப்பினும், அடுத்த பந்திலேயே ஷர்துல் ஒரு மேஜிக்கை நிகழ்த்திக் காட்டினார். சரியான லெந்த்தில்தரையிறங்கிய அந்தப் பந்து, எதிர்பாராத விதமாக ஸ்விங்காகி, ஆஃப் ஸ்டம்ப்பை தாக்கியது. அந்தப் பந்தை ஊகிப்பதில் ஐயர் தவறினார். பந்தின் அதிவேகம் மற்றும் ஸ்விங் ஆகியவற்றால் அவர் திகைத்துப்போனார்; சொல்லப்போனால், அந்தப் பந்து எங்கிருந்து வந்தது என்பதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாமல், அவர் முழுமையான குழப்ப நிலையில் உறைந்துபோனார்.
இதையும் படிக்க : IPL 2026: கொல்கத்தாவிற்கு வில்லனாக வரும் மழை.. பெங்களூரு பிளே ஆஃப்க்கு முன்னேறுமா?




ஐயரின் விக்கெட்டை வீழ்த்திய உடனேயே, ஷர்துலின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவர் மைதானம் முழுவதும் ஓடி, தனது தனித்துவமான பாணியில் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினார். ஒரே ஓவரில் இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம், அவர் பஞ்சாப் அணியை ஆழமான நெருக்கடிக்குள் தள்ளினார். இதனையடுத்து அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் குவித்தது.
இதையும் படிக்க : Team India: பும்ரா, சிராஜூக்கு ஓய்வு..? ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் யார் களம்..?
இதனையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன் நல்ல துவக்கம் தந்தனர். குறிப்பாக ரிக்கல்டன் சிறப்பாக ஆடி 23 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். அவர்களைத் தொடர்ந்து நமன் திர் வந்த வேகத்திலேயே ஒரு சிக்சர் அடித்து பெவிலியன் திரும்ப, கடைசி கடைசி கட்டத்தில் திலக் வர்மா ருதர்ஃபோர்டு அணியை வெற்றி பெற போராடினர். கடைசி கட்டத்தில் திலக் வர்மாவுடன் வில் ஜேக்ஸ் இணைந்தார். இருவரும் சேர்ந்து மும்பை அணிக்கு வெற்றி தேடி தந்தனர். திலக் வர்மா 6 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என 75 ரன்களுடனும், வில் ஜேக்ஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 25 ரன்களுடனும் ஆட்டமிழக்கமால் இருந்தனர்.