IPL 2025 Qualifier 1: 9 ஆண்டுகளுக்கு பிறகு! இறுதிப்போட்டியில் இடம்பிடித்த பெங்களூரு.. பஞ்சாப் பரிதாப தோல்வி!
RCB's Dominant Win: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, ஐபிஎல் 2025 இன் முதல் குவாலிஃபையர் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 9 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. பஞ்சாப் 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சர்மா மற்றும் ஹேசில்வுட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பில் சால்ட் 56 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் கிங்ஸ் இன்னும் வெளியேறவில்லை, எலிமினேட்டர் வெற்றியாளரை எதிர்கொள்ளும்.

ஐபிஎல் 2025 (IPL 2025) இன் முதல் குவாலிஃபையர் போட்டியில் இன்று அதாவது 2025 மே 29ம் தேதி ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் (Punjab Kings) மோதியது. இந்த போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், பெங்களூரு அணி 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதற்கு முன்பு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த 2016ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடி தோல்வியை சந்தித்தது. ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 1ல் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் ஆரம்பம் முதலே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பதிலுக்கு பெங்களூரு அணி 10 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் வெற்றியைப் பதிவு செய்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
9 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் பெங்களூரு களம்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசியாக 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடியது. அதன் பிறகு, பெங்களூரு அணி பல முறை பிளேஆஃப்களுக்கு முன்னேறியது. ஆனால் ஒரு முறை கூட இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை. இறுதியாக, ஐபிஎல் 2025 சீசனில் இறுதிப்போட்டியில் முதல் அணியாக பெங்களூரு அணி முதல் அணியாக நுழைந்து அசத்தியது. பெங்களூரு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சுயாஷ் சர்மா மற்றும் ஜோஷ் ஹேசில்வுட்தான். இவர்கள் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, பஞ்சாப் அணியை 101 ரன்களுக்குள் சுருட்டினர். பெங்களூரு அணி இலக்கை துரத்தியபோது, தொடக்க வீரர் பில் சால்ட் 27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் எடுத்து வெற்றியை தேடிதந்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 3 பெரிய ஹீரோக்கள் இருந்தனர். கேப்டன் ரஜத் படிதரின் முதல் பந்துவீச்சு முடிவு சரியென்று சுயாஷ் சர்மா மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் நிரூபித்தனர். சுயாஷ் சர்மா 3 ஓவர்களில் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மறுபுறம், ஜோஷ் ஹேசில்வுட்டும் அபாரமாக பந்து வீசி 3.1 ஓவர்களில் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது அபாயகரமான பந்துவீச்சின் விளைவாக, பஞ்சாப் அணி அதன் சொந்த மைதானத்தில் வெறும் 101 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது.




பஞ்சாப் அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு:
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், ஐபிஎல் 2025-ல் இருந்து அந்த அணி இன்னும் வெளியேறவில்லை. புள்ளிகள் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்ததன் பலனை பஞ்சாப் அணிக்கு மற்றொரு வாய்ப்பை கொடுத்துள்ளது. அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டியின் வெற்றியாளரை இரண்டாவது தகுதிச் சுற்றில் எதிர்கொள்ளும். இதில் வெற்றிபெறும் அணி ஐபிஎல் 2025ல் இரண்டாவது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.